ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நைக்கான் காடு, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் நரேஷ் குமார்(39). கேட்டரிங் மற்றும் சமையல் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வயிற்று வலியைத் தாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் நரேஷ் குமாருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேஷ் குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே நரேஷ் குமார் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.