Skip to main content

‘ஊரே தீபாவளி கொண்டாடுது... ஆனா நம்ம குடும்பத்துல நடக்கலயே’- சோகத்தில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

 the young man involved in the theft in the tragedy

 

திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. அப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவரைப் பல நாட்களாக நோட்டமிட்டு புர்கா அணிந்துவந்து கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மன்னார்குடி காமராஜ் நகரைச் சேர்ந்த ரெங்கராஜ் - கிரிஜா தம்பதி, இரவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர். கயவர்கள் நள்ளிரவில் கொல்லைப்புற கதவை உடைத்து, கிரிஜாவின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்றனர். 

 

அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நன்னிலம் அருகே உள்ள விசலூரைச் சேர்ந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றார்கள். அவர்கள் சுற்றுலா செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டி 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல திருவாரூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த வடிவேல் - கவிதா தம்பதியினர், வேதாரண்யத்திற்கு கவிதாவின் தந்தை இறப்பிற்குச் சென்றனர். அவர்கள் செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த வீட்டிலும் கைவரிசையைக் காட்டினர்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அதில் 25 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் பணமும் பறிபோனது. கூட்டுறவு நகரைச் சுற்றி மாவட்ட காவல்படை மைதானம், மாவட்ட காவல் தலைமையகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது என்கிற அச்சம்கூட இல்லாமல் கொள்ளையடிக்கிறார்களே என்பதுதான் கூடுதல் ஆச்சர்யம். இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த சம்பவமாக நன்னிலம் அருகே மணவாளம்பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தையே கடத்திச் சென்ற விவகாரம் மாவட்டத்தையே பூதாகரமாக்கியது. பேருந்து ஓட்டுநர் நன்னிலம் ஆய்வாளர் சுகுணாவிடம் புகார் அளித்தார். அடுத்த நிமிடமே விசாரனையில் இறங்கிய ஆய்வாளர், பேருந்து நிறுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த கண்கானிப்பு கேமராக்களையும், அந்த பேருந்து சென்ற வழிதடங்களை ஆய்வு செய்து, அந்தந்த பகுதி போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

 

தஞ்சை - திருச்சி சாலையில் திருப்பாய்த்துறையில் அந்தப் பேருந்தை அங்குள்ள போலீசார் வளைத்துப்பிடித்தனர். ஆனாலும் பேருந்தைக் கடத்திய நான்கு இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிறகு திருடர்களைப் பிடிக்க நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையில் தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில் திருப்பூரில் பதுங்கியிருந்தவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பேருந்தைக் கடத்திய நான்கு பேரும் இருபத்தைந்து வயதைத் தாண்டாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யம். இதுபோன்ற சம்பவங்கள் அடங்குவதற்குள் அடுத்த கொள்ளையாக நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரத்தில் நடந்தது. கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

 

 the young man involved in the theft in the tragedy

 

அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடம் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றிருக்கிறார்.

 

நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்துள்ளார். பொதுமக்களே பாராட்டும் விதமாக அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடதக்கது. 

 

எப்படி திருடினான், என்ன நடந்தது, எப்படி பிடித்தீர்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணாவிடமே கேட்டோம், “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.