Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை கார் ஏற்றிக் கொன்ற இளைஞர்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

young man incident a woman by car in vedaranyam

 

நாகை மாவட்டம், வேதாரண்யத்திற்கு அருகே உள்ளது புஷ்பவனம். இந்தக் கிராமத்தில் உள்ள அழகுகவுண்டர் காட்டைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவருக்கு 20 வயதில் அருண் என்ற மகன் இருக்கிறார். இந்த அருண் சேலத்தில் உள்ள தனியார் மயக்கவியல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

கல்லூரியில் படித்துக்கொண்டே பிசினஸ் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த அருண், கொல்லிமலையில் இருந்து மளிகைப் பொருட்களை வரவழைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், தன்னிடம் விற்பனைக்காக உள்ள பொருட்களை சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் விளம்பரப்படுத்தி வந்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி வந்த அருணுக்கு, அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான நபர்கள் அருணுக்கு வாட்சப் செய்து மளிகைப் பொருட்களை வாங்கிக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறு, வாட்ஸ்ஆப் மூலம் மளிகைப் பொருட்களை வாங்கும்போது, வேதாரண்யத்திற்கு அருகேயுள்ள தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி என்பவரோடு நட்பு ஏற்பட்டுள்ளது.

 

42 வயதான துர்கா தேவி திருமணமானவர். இவரின் கணவர் சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு 3 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்து விவசாயம் பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில், முதலில் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே அருணோடு பேசி வந்த துர்கா தேவி, நாளடைவில் நெருங்கிப் பேசி வந்துள்ளார். பின்னர், ஃபோனிலும் இருவரின் உரையாடல் நீண்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இன்னும் பெரிதாகி, இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால், அடிக்கடி இருவரும் ஃபோன் பேசிக்கொள்வதும் வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ கால் பேசுவதுமென நெருக்கம் அதிகமாகியுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்குத் தெரியாமல் வேதாரண்யத்தில் உள்ள புஷ்பவனம் கடற்கரைப் பகுதிக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். துர்காதேவிக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம், அருண் வாரி வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி அருணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இந்தப் பிறந்த நாளை துர்கா தேவியுடன் கொண்டாட நினைத்த அருண், வழக்கமாக சந்திக்கும் புஷ்பவனம் பீச்சுக்கு அழைத்துள்ளார். அதன்படி, புஷ்பவனம் கடற்கரையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிக்கு இருவரும் காரில் சென்றுள்ளனர். யாருமற்ற இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். எல்லாம் முடிந்த பிறகு, புறப்படுவதற்கு தயாரான அருணிடம், அவசரமாக தனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

 

அதற்கு தன்னிடம் பணம் இல்லை என மறுத்துள்ளார் அருண். அப்போது, திடீரென ஆவேசமான துர்கா, எனக்கு ஒரு அவசரம்னா பணம் தர மாட்டியா? எனக் கொந்தளித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் வந்துள்ளது. அந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற துர்கா, ஊருக்குள் போயி நீ எப்படிப்பட்டவன் என்பதை எல்லாரிடமும் சொல்றேன்... என ஆத்திரத்தோடு புறப்பட்டுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்து நின்ற அருண், இனி துர்காவை உயிரோடு விட்டால், தன்னைப் பற்றி எல்லோரிடமும் கூறிவிடுவார் எனத் தனது காரினை எடுத்துக்கொண்டு, துர்காவை நோக்கி வேகமாகச் சென்றுள்ளார். அப்போது, அருணை விட்டு வேகமாக நடந்து சென்ற துர்காவின் மீது ஏற்றியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத துர்கா, பெரும் அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த துர்கா வலியில் துடித்துள்ளார். ஆனால் அருண், மறுபடியும் காரை பின்னோக்கி எடுத்து மீண்டும் மேலே ஏற்றியுள்ளார்.

 

இப்படி மூன்று முறை ஏற்றியதும் அதே இடத்தில் துர்கா பரிதாபமாக இறந்துள்ளார். பின்பு அந்த சடலத்தை இழுத்துச் சென்று, பக்கத்தில் இருந்த புதருக்குள் போட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார் அருண். மகளிர் குழு பணம் கட்டுவதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த சுந்தரமூர்த்தியும் தனது மகனும் சேர்ந்து தேடியுள்ளனர். அப்போது, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் ரத்தக் காயங்களோடு ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக வாட்சப்பில் செய்தி பரவியுள்ளது. இதனைப் பார்த்த சுந்தரமுர்த்தி, அது தன்னுடைய மனைவி துர்கா என்பதை அடையாளம் கண்டு அழுது புலம்பியுள்ளார். அதே நேரத்தில், கடற்கரையில் பெண்ணின் சடலம் கிடக்கும் செய்தியறிந்து, சம்பவ இடத்திற்கு வேதாரண்யம் போலீசார் விரைந்து வந்துள்ளனர். அங்கு வந்த போலீசார், துர்காவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

மேலும், இது குறித்து துர்காவின் கணவர் சுந்தரமூர்த்தியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் போது, அருணுக்கும் துர்காவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், அருணை விசாரணைக்கு அழைத்து, முறைப்படி விசாரணை செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கிய அருண், நடந்த அத்தனை உண்மைகளையும் கூறி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனையடுத்து, போலீசார் அருணை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவால் 42 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.