
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் (45) கார்பென்டர் ஆக (தச்சர்) பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிகளுக்கு நந்தினி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட 2 பிள்ளைகள். நந்தினி இந்தாண்டு 10 ஆம் வகுப்பை முடித்து 11 ஆம் வகுப்பு செல்லவுள்ளார். இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜெகத்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள புலிவலம் கிராமத்திற்கு குடிபெயர்ந்து அங்கு தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி கோடை விடுமுறை என்பதால் ஜெகத்குமாரின் அக்காள் மகள் இருவரும் புலிவலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெகத்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்றதையடுத்து நந்தினி மற்றும் அக்காள் மகள்கள் உள்பட 4 பேரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டிவிட்டு உள்ளே சென்று நந்தினியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியை அந்த இளைஞர் சரமாரியாக குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கச் சென்ற ஜெகத்குமாரின் அக்காள் மகளையும் அந்த இளைஞர் தாக்கியுள்ளார். பின்னர் அவர் வலி தாங்கமுடியாமல் வெளியே ஓடிவந்து கத்தி கூச்சலிட்ட நிலையில் அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது நந்தினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதேசமயம், அந்த இளைஞர் தனக்குத்தானே கத்தியால் குத்தி காயபடுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞரை பிடித்த அக்கமபகக்த்தினர் தர்ம அடி கொடுத்து தகவலின் பேரில் வந்த கொண்டபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவி நந்தினியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் காயமடைந்த ஜெகத்குமாரின் அக்காள் மகள் மற்றும் அந்த இளைஞர் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நந்தினியை கத்தியால் குத்தியது கே.ஜி. கண்டிகை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சுப்பிரமணி(21) என்பது தெரியவந்தது. மேலும் தனியார் கம்பெணியில் வேலை பார்த்து வரும் சுப்பிரமணி, மாணவி நந்தினியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது காதலை நந்தினி ஏற்காததால் சுப்பிரமணி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறையின் முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த கோர சம்பவத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.