முறையற்ற தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மணலூர் கிராமத்தை ஒட்டியுள்ள கல்குவாரி குட்டையில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொன்பரப்பி போலீசாருக்கு பெண் ஒருவர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து மூட்டையில் சடலமாகக் கிடந்த அந்த இளைஞரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர். அதில் இருந்தது அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (22) என்பது தெரியவந்தது. உடனடியாக இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்குவாரியில் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு புகாரளித்த அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரளித்த பெண்ணும் உயிரிழந்த இளைஞரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. விஜயபிரியா என்ற அந்த பெண்ணிற்கும் 22 வயதான தங்கத்துரைக்கும் அதே கல்குவாரியில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது முறையற்ற உறவாக தொடர்ந்தது. ஏற்கனவே விஜய பிரியாவுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகளான நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விஜய பிரியாவின் கணவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் விஜய பிரியாவிற்கு அதே கல்குவாரியில் பணிபுரியும் மற்றொரு நபரான ரசாக் என்பவருடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை தங்கதுரை எதிர்த்து மிரட்டியுள்ளார். கடந்த பதினொன்றாம் தேதி விஜயபிரியாவின் வீட்டிற்கு சென்ற தங்கதுரை அவரிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்பொழுது விஜயபிரியாவை தங்கதுரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அந்த நேரத்தில் சுதாரித்துக் கொண்ட விஜயபிரியா கத்தியை எடுத்து தங்கதுரையை வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே தங்கதுரை உயிரிழந்தார்.
உடனடியாக ராசாக்கிற்கு தகவல் கொடுக்க, இருவரும் சேர்ந்து தங்கதுரையின் உடலை சணல் சாக்கில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசிச் சென்றனர். பின்னர் விஜயபிரியாவே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் 22 வயது இளைஞர் கொலை செய்த விஜயபிரியாவையும், அவருக்கு உதவியாக இருந்த ராசாக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.