Skip to main content

விஜயபிரியா கொடுத்த ட்விஸ்ட்; கல்குவாரியில் மிதந்த இளைஞரின் சடலம்; கொலையில் முடிந்த முறையற்ற தொடர்பு

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

young man floats in Calvary; improper relationship incident

 

முறையற்ற தொடர்பில் ஏற்பட்ட தகராற்றில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மணலூர் கிராமத்தை ஒட்டியுள்ள கல்குவாரி குட்டையில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொன்பரப்பி போலீசாருக்கு பெண் ஒருவர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து மூட்டையில் சடலமாகக் கிடந்த அந்த இளைஞரின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர். அதில் இருந்தது அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (22) என்பது தெரியவந்தது. உடனடியாக இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

கல்குவாரியில் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு புகாரளித்த அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரளித்த பெண்ணும் உயிரிழந்த இளைஞரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. விஜயபிரியா என்ற அந்த பெண்ணிற்கும் 22 வயதான தங்கத்துரைக்கும் அதே கல்குவாரியில் வைத்து பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது முறையற்ற உறவாக தொடர்ந்தது. ஏற்கனவே விஜய பிரியாவுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகளான நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

விஜய பிரியாவின் கணவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் விஜய பிரியாவிற்கு அதே கல்குவாரியில் பணிபுரியும் மற்றொரு நபரான ரசாக் என்பவருடன் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை தங்கதுரை எதிர்த்து மிரட்டியுள்ளார். கடந்த பதினொன்றாம் தேதி விஜயபிரியாவின் வீட்டிற்கு சென்ற தங்கதுரை அவரிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்பொழுது விஜயபிரியாவை தங்கதுரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அந்த நேரத்தில் சுதாரித்துக் கொண்ட விஜயபிரியா கத்தியை எடுத்து தங்கதுரையை வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே தங்கதுரை உயிரிழந்தார்.

 

உடனடியாக ராசாக்கிற்கு தகவல் கொடுக்க, இருவரும் சேர்ந்து தங்கதுரையின் உடலை சணல் சாக்கில் கட்டி கல்குவாரி குட்டையில் வீசிச் சென்றனர். பின்னர் விஜயபிரியாவே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் 22 வயது இளைஞர் கொலை செய்த விஜயபிரியாவையும், அவருக்கு உதவியாக இருந்த ராசாக்கையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.