Young man deceived girl by promising to marry her

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள எருக்கம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் தங்கதுரை. கூலித் தொழிலாளியான இவருக்கும் கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த ட்17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தங்கதுரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை பரிசோதித்தபோது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தங்கதுரையை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், தங்கதுரை சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர், அருகே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் தங்கதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.