Skip to main content

ஆற்றில் குதித்து தத்தளித்த இளம் பெண்...! - காப்பாற்றிய பரிசல் ஓட்டிகள்

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

The young girl who jumped in the river and staggered

 

ஈரோட்டின் எல்லையான கருங்கல் பாளையத்தையடுத்து காவிரி ஆறு ஒடுகிறது.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக  காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம்.மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீபகாலமாக இந்த காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து  ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் சில நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

 

இந்த நிலையில் 18 ந் தேதி காலை 11 மணி அளவில் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தின் மேல் ஏறி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றில் குதித்தார். அவர்  தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி டிரைவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் விபரத்தை தெரிவித்தார். அதேசமயம் அந்தப் பெண் காவிரி ஆற்று நீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார். 

 

அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த தனபால், அவரது மனைவி வடிவரசி ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை நோக்கி வேகமாக பரிசல் ஓட்டினார்கள். காவிரி ஆற்றில்  தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை நீரிலிருந்து மீட்டு தங்களது பரிசலில் ஏற்றி வேகமாக  கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு இருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

 

போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் விபரீத முடிவு எடுத்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவரின் கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உயிரை காப்பாற்றிய பரிசல் ஓட்டிகளான தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.