Skip to main content

வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தை... வீடியோ கால் பேசிய மகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி... வெளிவந்த தகவல்! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

girl

 

துபாயில் வேலை பார்த்துவரும் தந்தையிடம் மகள் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். எட்டு ஆண்டுகளுக்கு மேலாகத் துபாயில் கூலி வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவளான ஆர்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துவருகிறார். வெளி நாட்டிலிருக்கும் தனது தந்தையிடம் இரண்டு நாளுக்கு ஒருமுறை பேசிக்கொண்டிருப்பது ஆர்த்தியின் வழக்கம். கரோனா ஊரடங்குக்குப் பின் தினசரி காலையில் நலம் விசாரித்து வந்திருக்கிறார்.


கடந்த ஏப்ரல் 27- ஆம் தேதி காலையும் வழக்கம்போல தந்தையிடம் செல்போனில் சார்ஜ் போட்டவாறே வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில் ஆர்த்தியின் காதில் காயம் ஏற்பட்டதோடு, வெடித்த செல்போனின் துகள்கள் ஆர்த்தியின் இரண்டு கண்களிலும் பட துடிதுடித்துக் கதறினார்.

ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு சுற்றியிருந்த குடியிருப்புகளிலுள்ள மக்கள் ஓடிவந்து அவரை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்குப்பின், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சைக்குப்பின் அன்று இரவே வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்த ஆர்த்திக்கு மீண்டும் நள்ளிரவில் கண்வலி அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலமாகத் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உறவினர்.

 

 


இதுகுறித்து ஆர்த்தியின் உறவினர் ஒருவரிடம் விசாரித்தோம், "சமீபத்தில் அரேபிய, வளைகுடா நாடுகளில் வேலையிழப்பு குறித்த பேச்சுகள் அடிபட்டுவருவதால் வீடியோ காலில் தந்தையிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஆர்த்தி. ஏப்ரல் 26 அன்று இரவு முழுவதும் மின்வெட்டு. செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்ததால் மறுநாள் ஒன்பது மணிக்கு கரண்ட் வந்ததும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆர்த்தி, அப்படியே சார்ஜ் போட்டபடியே தனது தந்தையிடம் பேசத்தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்போன் வெடித்து ஆர்த்தியின் முகத்தைச் சிதைத்து விட்டது...'' என்கிறார் வேதனையுடன்.

மிகக் குறுகிய காலத்தில் செல்போன் இளைய தலைமுறையின் மீது செலுத்திவரும் அதீத தாக்கம் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய இணைய வசதியுடனான செல்போனே பயன்படுகிறது. ஜூம் மீட்டிங்குகள், ஆபிஸில் அனைவரும் கூடிப்பேசும் வசதியை நிவர்த்தி செய்கிறது. செல்போன் வழங்கும் வசதிகளை அத்தனை எளிதாய்ப் பட்டியலிட்டுவிட முடியாது. அதேசமயம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக்கூடாது என்பது எளிய பாதுகாப்பு விதி.
 

http://onelink.to/nknapp



இரவெல்லாம் மின்வெட்டு செய்யப்பட்டிருந்ததும், பகலில் மின்சாரம் வந்ததும், வோல்டேஜ் ஏற்ற இறக்கமும் தந்தையுடன் பேசும் ஆர்வமும் ஒரு பெண்ணின் கண்களுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது. நமக்கென்ன ஆகப்போகிறது… என சார்ஜ் போட்டபடியே பேசுபவர்களே, கண்கள் மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தலாம்... உஷார்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.