Skip to main content

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா; ஈரோட்டில் பரபரப்பு 

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Young girl sitting in Superintendent of Police's office dharna; agitation in Erode

 

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

 

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 23ம் தேதி காலை 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். அவர் திடீரென எஸ்.பி. அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி எஸ்.பி. அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறியதாவது:- “எனது சொந்த ஊர் பெங்களூரு. எனது பெயர் நித்தியா. ஈரோடு முனிசிபல் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். திடீரென ஒருநாள் அவர், ‘உன்னை பிடித்திருக்கிறது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் முன்பு நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர், அவர்களது பெற்றோருடன் வந்து என்னிடம் திருமணம் பற்றி பேசினார். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவர் குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

 

அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னைப் பற்றி தவறாகச் சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்து என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும் எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

 

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அப்பெண்ணிடம் கூறி அனுப்பி வைத்தார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.