Young girl sitting in Superintendent of Police's office dharna; agitation in Erode

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல்நிலவியது.

Advertisment

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 23ம் தேதி காலை 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். அவர் திடீரென எஸ்.பி. அலுவலக நுழைவாயில் முன்புஅமர்ந்து கொண்டுதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள்நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி எஸ்.பி. அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

Advertisment

அப்போது அந்தப் பெண் போலீசாரிடம் கூறியதாவது:- “எனது சொந்த ஊர் பெங்களூரு. எனது பெயர் நித்தியா. ஈரோடு முனிசிபல் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். திடீரென ஒருநாள் அவர், ‘உன்னை பிடித்திருக்கிறது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் முன்பு நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர், அவர்களது பெற்றோருடன் வந்து என்னிடம் திருமணம் பற்றி பேசினார். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவர் குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னைப் பற்றி தவறாகச் சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்து என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும் எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

Advertisment

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அப்பெண்ணிடம் கூறி அனுப்பி வைத்தார்கள்.