திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் டிசம்பர் 21ஆம் தேதி காலை ஜோலார்பேட்டை - காட்பாடி ரயில்வே பாதையில் வந்த ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், அங்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அம்மாணவி அதே கிராமத்தைச் சேர்ந்தஎலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த 21 வயதான ரமணன் என்ற இளைஞரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
காதலர்களுக்குள் டிசம்பர் 20 ஆம் தேதி செல்போனில் சண்டை போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. காதலி சண்டை போட்டதால் அன்று இரவு ரமணன் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அம்மாணவி அதிர்ச்சியாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்ததாக கூறுகின்றனர்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரமணனின் சடலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, எதற்காக இருவருக்கும் சண்டை வந்தது என்று அவர்களது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.