Skip to main content

காதலிக்க சொல்லி டார்ச்சர்! பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Young girl passed away in kanniyakumari

 

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மருதங்கோடு இலங்கவிளை பகுதியை சேர்ந்தவர் காவியா (20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து விட்டு எம்.ஏ. படிக்க விண்ணப்பித்து இருந்தார். இதே போல் காவியாவின் பக்கத்து ஊரான இலுப்பைவிளையைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் ரஞ்சித் (20) காவியா படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார்.

 

ஒரே கல்லூரியில் படித்து வருவதால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் கலலூரிக்கு சென்றுவரும்போது ஒன்றாகவே பயணித்துள்ளனர். அதே போல், ஊரில் சந்திக்கும் போதெல்லாம் நெருங்கி பேசி வந்துள்ளனர். அதேபோல், ரஞ்சித்தும், காவியாவும் சேர்ந்து நின்று ஏராளமான போட்டோக்களும் செல்பிகளும் எடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக ரஞ்சித், தன்னை காதலிக்கும்படி காவியாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு காவியா மறுத்துள்ளார். மேலும் ரஞ்சித், “என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் உன் பெற்றோரையும் நிம்மதியாக வாழ விட மாட்டேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த விஷயத்தை காவியா பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் பெற்றோர்கள், மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த ரஞ்சித் காவியாவை தொடர்புகொண்டு, “போலீசில் புகார் கொடுத்தால் நீயும் நானும் சேர்ந்து இருக்கும் போட்டோவை போலீசிடம் கொடுப்பேன். மேலும் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு உன்னை அசிங்கப்படுத்துவதோடு உன்னை வெளியில் நடக்க விடாமல் செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், காவியாவை பெற்றோர், அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். அங்கு சென்ற காவியா அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ முடித்த ஷெர்லின் புரூஸ் (20) என்பவருடன் பழகியுள்ளார். இதனால் உறவினர்கள் காவியாவை பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டனர். இந்நிலையில் ரஞ்சித், காவியாவுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரவச் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காவியா 10-ம்  தேதி மாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதையடுத்து ரஞ்சித் தலைமறைவாகியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்