ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி கணக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(35). விவசாயி. இவருக்கு கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கானகஹள்ளி பகுதியை சேர்ந்த மகள் பிரியா(30) என்பவருடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். சீனிவாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனவேதனையடைந்த பிரியா கடந்த 30ம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காகப் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் அம்மா ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் பிரியாவின் இறப்புக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.