ADVERTISEMENT

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்... நண்பர்களுக்குள் நடந்த போட்டியில் ஒருவர் கொலை... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

12:08 PM Dec 12, 2019 | Anonymous (not verified)

நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம் அருகே உள்ளது சாம்பல் ஏரி. இதன் அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகள் என்பதால், பகல் நேரங்களில் இப்பகுதிக்குள் மக்கள் நடமாடவே அச்சப்படுவார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் குடிமகன்களுக்கு இப்பகுதி திறந்தவெளி ‘பார்போல ஆகிவிட்டது. ஆள் அரவமற்ற காடு என்பதால், காதலர்களும் இங்கே வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்கின்றனர்.

ADVERTISEMENT



அண்மையில் இக்காட்டிற்கு தெற்கு கொள்ளிருப்பு காலனியைச் சேர்ந்த பிரகாஷ், கார்த்தி, ராஜ துரை, சதீஷ்குமார், சிவபாலன் ஆகிய ஐந்து நண்பர்கள் மது பாட்டில்கள், அசைவ உணவு சகிதம் சென்றனர். மது அருந்திக்கொண்டு நண்பர்கள் ஜாலியாக இருந்த போது, அருகில் 30 வயதுடைய ஒரு பெண்ணும் வாலிபரும் தனிமையில் இருந்ததை பார்த்தனர். போதையில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் அப்பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே, ஓடிச் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அந்த வாலிபரை அடித்துத் துரத்திவிட்டு, பெண்ணை மிரட்டி அந்த இடத்திலேயே ஐவரும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். அங்கே ஆட்கள் வரும் அறிகுறி தென்பட்டதால் அப் பெண்ணை காட்டின் வேறொரு பகுதிக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்தனர்.

ADVERTISEMENT



தங்கள் ஆசை நிறைவேறியதும் அப்பெண்ணை அனுப்பி விட முடிவு செய்தனர். அப்பெண்ணின் ஊர் எதுவென்று விசாரித்து, அங்கேயே கொண்டுபோய் விடுவது என்றும் முடிவு செய்தனர். ஆனால், ஐந்துபேரில் யார் பைக்கில் அழைத்துப்போவது என்று நண்பர்களுக்குள் பெரிய விவாதமே நடந்தது. இதில் பிரகாஷ் என்பவன், தான் அழைத்துச் செல்வதாக மற்றவர்களிடம் கூறினான். அதற்கு மற்ற நால்வரும் சம்மதிக்கவில்லை. "தனியாக கொண்டுபோய் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாய். அதனால் உன்னுடன் அனுப்ப முடியாது'’ என்று மற்ற நால்வரும் பிடிவாதம் பிடித்தனர். அப்படியென்றால் யார்தான் அழைத்துச்செல்வது என்று போட்டி போட்டுக் கொண்டனர்.

இதனால் பெரும்பிரச்சினை உருவானது. நான்தான் அழைத்துச்செல்வேன்' என பிரகாஷ் கறாராக சொல்லிவிட்டதால், மற்ற நால்வரும் அவர் மீது கோபம் அடைந்தனர். பிரகாஷுடன் தகராறில் ஈடுபட்டனர். போதை உச்சத்தில் இருந்ததால் நண்பன் என்றும் பாராமல் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து பிரகாஷ் மீது தாக்கினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் பிரகாஷ். கீழே விழுந்தவர், பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.


போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தாலும், ஒருவழியாக பிரகாசை தூக்கிக்கொண்டு மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பிரகாஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதற்குள் மருத்துவமனை மூலமாக இந்த விசயம் தர்மல் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து வந்து நால்வரையும் கைது செய்தனர். பிரகாஷ் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது, "நாங்கள் மது அருந்துவதற்காக சாம்பல் ஏரி பகுதிக்குச் சென்றோம். அப்போது திடீர் என சில மர்ம நபர்கள் வந்து எங்களை தாக்கினார்கள். அதில் பிரகாஷ் மயங்கி விழுந்தார்' என்று கூறினர். இந்நிலையில், பிரகாஷை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கக் கோரி, அவரது உறவினர்கள் தர்மல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன்பின்னர் போலீசார் தீவிரமாக விசாரித்ததில்... பிரகாசை அடித்து கொலை செய்ததை நண்பர்கள் நால்வரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், "எதற்காக கொலை செய்தீர்கள்?' என்று போலீ சார் விசாரித்துக் கொண்டிருக்கையில்... அங்கே வந்தார் அந்த இளம்பெண்.


ஊமங்கலம் அருகே உள்ள தெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்த என் பெயர் பத்மா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கணவரை இழந்த விதவையான நான், ஆண் நண்பருடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு டூவீலரில் திரும்பி வந்தபோது, ஐந்துபேர் எங்களை அடித்து, உதைத்தனர். என்னை காட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். என்னை திரும்ப கொண்டுவந்து விடுவதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவனை அடித்துக் கொன்றுவிட்டனர்.

அந்தச் சமயத்தில் நான் அவர்களிடம் இருந்து தப்பி வந்து விட்டேன். இப்படிப்பட்ட காமக்கொடூரன்களை சும்மாவிடக் கூடாது என்றுதான் துணிந்து காவல்நிலையம் வந்து புகார் செய்கிறேன்'' என்று அப்பெண், தர்மல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பத்மாவின் ஆண் நண்பரையும் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சம்பவம் நடந்ததை உறுதி செய்துகொண்ட போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

"சமூகவிரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது சாம்பல் ஏரி. பாலியல் கூட்டு வன்கொடுமைகள் அடிக்கடி இங்கே நடக்கின்றது. வெளியே சொல்லப் பயந்து எந்தப் பெண்ணும் போலீசுக்கு செல்வதில்லை. பத்மா மட்டுமே போலீசுக்குச் சென்றுள்ளார். இப்படியான சம்பவங்களால் அந்த வழியாக மக்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT