Skip to main content

அரசு மரியாதையுடன் இளம் காவலர் சுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
dhuraimuthu

 

வாரண்ட்டை நிறைவேற்றும் வகையில் தொடர்புடைய கொலை குற்றவாளியான ஏரல் துரைமுத்துவைப் பிடிக்கப்போன, க்ரைம் போலீசின் இளம் காவலர் சுப்பிரமணியம் துரைமுத்துவைத் துரத்தியபோது நடந்த தகராறில் துரைமுத்து வீச முற்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதன் முன்னோட்டத்தை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளிப்படுத்தியிருந்தது.

 

மங்கலக்குறிச்சியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைக் காரணமான துரைமுத்துவை பழிவாங்க நினைத்த எதிர்த்தர்ப்பினர் துரைமுத்துவின் சகோதரன் கண்ணனைக் கொன்றுள்ளனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர் தரப்பின் கணேசபாண்டியனை பேட்டைப் பகுதியில் துரைமுத்து பழிவாங்யிருக்கிறார். எதிர் தரப்பில் மூன்று உயிரிழப்புகள் என்பதால், துரைமுத்துவை விடவும் வலுவான எதிர்த்தரப்பு துரைமுத்துவை கொலை செய்ய வேவு பார்த்த நேரத்தில்தான் அவர்களைப் பழிவாங்க தன் சகாக்கள் நான்கு பேர்களுடன் வேட்டைத் தடுப்பு காவலரான தனது உறவினர் சுடலைக்கண்ணன் வேலை பார்க்கும் மணக்கரைப் பக்கம் உள்ள வனத்துறை காட்டின் ஒரு பம்ப்செட்டில் 10 நாட்களுக்கும் மேலாக பதுங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில் துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோதுதான் காவலர் சுப்பிரமணியம் வெடிகுண்டுச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

 

இதனிடையே வெடிகுண்டுச் சம்பவத்தில் பலியான இளம் காவலர் சுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கத்திற்காக அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் கொண்ட பெட்டியை நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர், தென்மண்டல ஐ.ஜி.முருகன் மற்றும் போலீசார் சுமந்து வந்தனர்.

 

மூன்று மாதக் கர்ப்பிணியான காவலர் சுப்பிரமணியனின் மனைவி, தன் 10 மாத ஆண் குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடமும் கண்ணீர் வடித்தார், இந்த சம்பவம் அனைவரின் கண்களையும் குளமாக்கியதோடு அங்கிருந்தோரின் நெஞ்சையும் கலங்கடித்துவிட்டது.

 

சுப்பிரமணியனின் வயதான தந்தை பெரியசாமி பெற்ற மகனைப் பறி கொடுத்த துயரத்திலிருந்தார். அரசு மரியாதையோடு ஆயுதப்படையினரின் 30 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த இளம் காவலர் சுப்பிரமணியனின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

தான் துரத்துவது கொடூர கொலைக் குற்றவாளி என்று தெரிந்தே உயிரைத் துச்சமாக மதித்து, கடமை உணர்வோடு அரச கட்டளையை நிறைவேற்ற பாய்ந்து சென்ற இளம் காவலர் சுப்பிரமணியன், தன்னுயிரைக் கொடுத்து கடமையைப் பழுதில்லாமல் நிறைவேற்றினார் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிச் சடங்கின் போது நடந்த சம்பவம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த உறவினர்கள்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
A woman who wakes up alive during a funeral in odisha

ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54). இவரது மனைவி புஜ்ஜி (52). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, புஜ்ஜியை சிகிச்சைக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவர்களுக்கு போதிய பணம் வசதி இல்லாத காரணத்தினால் சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இருப்பினும், வீட்டில் இருந்தபடியே புஜ்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (12-02-24) இரவு தூங்கிய புஜ்ஜி, அடுத்த நாள் காலை ஆன போதும் எழுந்திருக்கவில்லை. இதனால், கணவர் சிபாராம் பாலோவும், அவர்களது உறவினர்களும் புஜ்ஜி இறந்துவிட்டதாக கருதினர். மேலும் அவர்கள் மருத்துவர்களிடம் இறப்பை உறுதி செய்யாமல் இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, அன்று மாலை சுடுகாட்டுக்கு புஜ்ஜியை எடுத்துச் சென்று அங்கு அவருக்கு தீ வைக்க முயன்றனர். அந்த நேரத்தில் புஜ்ஜி, திடீரென்று கண் திறந்து எழுந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போதுதான், புஜ்ஜி இறக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து, புஜ்ஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இறுதிச் சடங்கின் போது உயிருடன் பெண் எழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Vijayakanth's was laid to rest with the honor

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தற்போது தீவுத் திடலில் இருந்து தொடங்கி பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை கொண்டுவரப்பட்டது. 

அங்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச் சடங்கில் மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன், கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், மறைந்த விஜயகாந்த்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு, குடும்ப முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.