ADVERTISEMENT

மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்! – டாஸ்மாக் இயக்குநருக்கு உத்தரவு!

05:29 PM Jul 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலையில் விற்கப்படவில்லை என்பதை, டாஸ்மாக் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக்கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 2003-ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும், அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும். விலைப் பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா, மதுபானங்கள் விற்கும்போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா, ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா, அதிக விலைக்கு விற்பவர்களைக் கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

“தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் எந்த மீறல்களும் இல்லை. உயர்த்தப்பட்ட மதுபான விலை விவரங்கள், அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க, திடீர் சோதனைகள் நடத்தும்படி, மூத்த மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க இவர்களும், பறக்கும்படையும் மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

மேலும், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை, அவர்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது. மேலும், கடை ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகளும் என மொத்தம் 9,319 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம், தமிழத்தில் உள்ள 18 மதுபான ஆலைகளிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆலைகள், உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றே நடத்தப்படுகின்றன.

மதுபானங்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் கலால் வரித்துறை மேற்பார்வை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அந்த ஆலையின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பார். மேலும், மதுபானங்களின் தரம் குறித்து சுதந்திரமான அமைப்புகளைக் கொண்டு பரிசோதித்து சான்றளிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT