மக்களை ஏமாற்ற முடியாது: நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு தமிமுன் அன்சாரி பதில்

THAMIMUN ANSARI

நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி.

அப்போது செய்தியாளர்கள், நடிகர் விஜய் தனது பட வெளியீட்டின் போது, பேசிய அரசியல் கருத்துகள் குறித்தும், நடிகர்களின் முதல்வர் கனவு குறித்தும் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்தவர், யாரும் அரசியலுக்கு வரலாம். ஒரு கட்சியில் சேர்ந்து MLA, MP என படிப்படியாக வளரலாம், மக்கள் ஆதரவு கிடைத்தால் உயர் பதவிகளை பெறலாம். ஆனால், சிலர் நேரடியாக முதலமைச்சர் கனவோடு வருகிறார்கள்.

இவர்கள் எல்லாம் யார்? காவிரிக்காக போராடினார்களா? மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக போராடினார்களா?

சமூக இணைய தளங்கள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. மக்களை ஏமாற்ற முடியாது. மக்களுக்காக வியர்வை சிந்துபவர்கள் தான் மக்கள் தலைவர்களாக முடியும் என்றார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், 40 ரூபாய்க்கு குறைவாக இவற்றை விற்க முடியும் என்ற நிலையில், அதானி, அம்பானி சம்பாதிக்க மத்திய அரசு வாய்ப்பளிக்கிறது என்றும், போகிற போக்கில் 1 லிட்டர் 100 ரூபாய் வரலாம் என அச்சம் தெரிவித்தார்.

actor THAMIMUN ANSARI vijay
இதையும் படியுங்கள்
Subscribe