Skip to main content

‘முன்பணம் செலுத்தி பணியில் இணையலாம்...’ - மாயமான மோசடியில் ஈடுபட்ட இளைஞர்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

You can join the work by paying in advance

 

சேலம், ஐந்து ரோட்டைச் சேர்ந்தவர் முத்துகிரண் (31). இவர், மூன்று ரோட்டில் எல்.என்.டி. பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்துவதாக சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில், ‘பணியில் சேருவோருக்கு, மாதம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். விரும்புவோர், 20 ஆயிரம் முன்பணம் செலுத்தி பணியில் இணையலாம். கரோனா காலம் என்பதால், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணிபுரியலாம். எல்.என்.டி. நிறுவனம் செப். 30இல் மூன்று ரோட்டில் உள்ள அலுவலகத்தை திறந்து செயல்படுத்தும்’ என தெரிவித்தார்.

 

அதை நம்பிய சிலர் அவர்களது வங்கி கணக்கு, கூகுள்பே, போன்பே மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். அத்துடன், அவர் நியமித்த பெண்கள், வீடுகளுக்கே வந்து நேரிலும் பணம் வசூலித்துள்ளார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் பணம் செலுத்தினர். ஆனால், அவர் தெரிவித்தபடி அலுவலகம் திறக்கப்படவில்லை. அத்துடன் வாடகை தருவதாக உறுதியளித்து பயன்படுத்திவந்த புது காருடன் மாயமாகிவிட்டார். திட்டமிட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முத்துகிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முத்துகிரண் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, வேலை அளிப்பதாக கூறி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஐ.டி. நிறுவனத்தில் பணி வழங்குவதாக கூறி இளைஞர், இளம்பெண்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சேலம் காவல் ஆணையர் நஜ்முல் ஹாதாவிடம் 50க்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் புகார் மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.