ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையம் வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''தியாகியை அடக்கம் செய்கின்ற நாள் இது. இன்றைக்கு அவர் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை செய்வோம். நாளைக்கு இதைப் பற்றி பேசுவோம். யார் பிணத்தை வைத்து அரசியல் செய்வது என்பது உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அதற்கு மேல் பாக்கி நாளைக்கு பேசிக் கொள்வோம்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது கார் மீது விழுந்த காலணினுடைய புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 'நேற்றைய நிகழ்வுகளை பற்றி நிறைய பேசலாம் ஆனால் பின்னர் கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளோடு உள்ளே நுழைந்து காலணி வீசிய பெண் விரும்பினால் தனது காலணியைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதனை தன்னுடைய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்' என தெரிவித்துள்ளார்.