'You Also Come With That Mind...' - Vijay's Instructions to the Volunteers

Advertisment

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் மூன்றுமுறை தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். நேற்று மூன்றாவது கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், 'நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும் பொழுது பாதுகாப்பையும் கட்டுப்பாடையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களின் விரித்தபடி இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் 'தவெக மாநாட்டிற்கு காவல்துறை கொடுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என விஜய் தொண்டர்களுக்கு நான்காவது கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisment

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல், வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்' என தெரிவித்துள்ளார்.