Skip to main content

“இதற்கெல்லாம் பொறுப்பேற்று யோகி மற்றும் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” - செல்வபெருந்தகை பேட்டி!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

இன்று (11.10.2021) காலை 10.00 மணி அளவில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மீதான படுகொலை தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் கலவரத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, மத்திய மோடி அரசைக் கண்டித்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெளன விரத போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிவ. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வபெருந்தகை கூறியதாவது, “நடந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலைக்குக் கண்டனம்  தெரிவித்து மௌன போராட்டத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக நாடு முழுவதும் கடைப்பிடித்துவருகிறோம். தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக, ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பாஜக அரசு அரச பயங்கரவாதத்தையும், வன்கொடுமையையும் செய்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் ஜனநாயக முறையில் தன்னுடைய போராட்டத்தை மேற்கொண்டிருந்த விவசாயிகள் மீது மத்தியமைச்சருடைய மகன் கார் ஏற்றி நான்கு பேரை படுகொலை செய்திருக்கிறார்.

 

இதன் விளைவாக ஒன்பது பேர் அங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பேற்று யோகி மற்றும் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். இது புதிதாக நடக்கும் வன்முறை அல்ல, புதிதாக நடக்கும் அரச பயங்கரவாதமும் அல்ல. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இன்று பாராளுமன்ற குழுவுடன் சென்று ஜனாதிபதியிடம் மனு அளிக்க இருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் வழிகாட்டுதல்களோடு ஒரு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய கோரிக்கை. இந்த வன்கொடுமையை, அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராக நாங்கள் மெளன போராட்டத்தை அனுசரித்துவருகிறோம்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.