Skip to main content

குற்றச்சாட்டு.. போராட்டம்.. போக்ஸோவில் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி முதல்வர் கைது! 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

YMCA College principal George Abraham arrested under pocso

 

ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியின் உடற்கல்வி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். 

 

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து உடற் கல்வியியல் படிப்பை படித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் (50) மீது 23 வயது மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அந்தப் புகாரில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துவருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அக்கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் தன் மீதான இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார். இதனை அறிந்த ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி மாணவர்கள் கடந்த மாதம் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

YMCA College principal George Abraham arrested under pocso

 

இதையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கல்லூரி நிர்வாகம் சார்பில், எட்டு பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாலியல் ரீதியாக ஜார்ஜ் ஆபிரகாம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. 


அதனைத் தொடர்ந்து அந்த மாணவி விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்