திண்டுக்கல்லில் கிழக்கு மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மணிப்பூர் கலவரத்தைத் தடுக்கத் தவறிய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், திண்டுக்கல் மாநகரில் உள்ள மணிக் கூண்டில் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மார்க்கெட் மேரி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கவிதா பார்த்திபன், மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி, கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி, மாநகர கவுன்சிலர் அருள்வாணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிழக்கு மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் மார்க்கெட் மேரி, “மகளிர் அணி சார்பில் பி.ஜே.பி. அரசைக் கண்டித்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பி.ஜே.பி. ஆட்சி செய்யக் கூடிய மணிப்பூரில் பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்த அந்தக் கொடூர கும்பலைக் கூண்டோடு உடனே கைது செய்ய வேண்டும். பதவிக்காக மதக் கலவரங்களை இந்த பி.ஜே.பி.ஒன்றிய அரசு தூண்டி விட்டு அதில் குளிர் காய்ந்து வருகிறது.
நேற்று மணிப்பூர், நாளை தமிழகமாக இருக்கலாம். அதனால்தான் இப்படிப்பட்ட கொடிய பி.ஜே.பி. விஷச் செடியை வேரோடு பிடுங்கி வீசி எறிய வேண்டும். அதற்காகத்தான் வருகிற 2024ல் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் மோடி அரசுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். அதற்குப் பொதுமக்கள் தயாராக இருங்கள்” என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.