ADVERTISEMENT

நாளுக்கு நாள் ஏறும் நூல் விலை.! -மத்திய அரசு பாராமுகம்

07:23 PM Nov 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாட்டில் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களும் நாளுக்கு நாள் விலையேற்றம் அடைந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கு அந்த பொருளின் மூலப்பொருளைக் கொள்ளை லாபத்துக்கு விற்க கார்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் என்ற விமர்சனமும் இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உதிரிப்பாகங்கள், வேளாண்மைக்குத் தேவையான உரம், பொருட்கள் இவற்றோடு சேர்ந்து ஜவுளி தொழிலையும் கார்பரேட் கம்பெனிகள் விழுங்கி விட்டது. இதன் விளைவு ஜவுளிக்கு மூலப் பொருளாள நூல் விலையை நாளுக்கு நாள் விலையை ஏறி அதன் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், அத்தொழில் சார்ந்த குடும்பத்தினரை நடு வீதியில் நிறுத்தியிருக்கிறது. நூல் விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள்.

தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த தொழில் ஜவுளி தொழில்தான். இப்போது இத்தொழில் சவக்களை படிந்த முகமாகக் காட்சியளிக்கிறது. காரணம் நாளுக்கு நாள் ஏறும் நூல் விலை ஏற்றம்தான்.

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில்தான் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தொடர் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய பா.ஜ.க. அரசின் ஜவுளித்துறை.

நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் என்பது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று உற்பத்தி செய்து அனுப்புவார்கள். அப்படி ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களை கூட உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் ஆர்டர் எடுக்கும் போது அப்போதுள்ள நூல் விலையைக் கணக்கிட்டு உற்பத்தி தயாரிப்பு செலவையும் சேர்த்து, உதாரணத்திற்கு ஒரு வேட்டி அல்லது லுங்கியின் விலை 100 ரூபாய் என பேசி முடிக்கப்பட்டு ஆர்டர் எடுக்கப்படும். ஆனால் அந்த ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யும் கால இடைவெளிக்குள் நூல் விலை ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதனால் உற்பத்தி தயாரிப்பு செலவு கூடுகிறது. ஆனால் ஆர்டர் எடுத்த தொகைக்கு ஜவுளி ரகங்களை கொடுத்தால் அதன் மூலம் நஷ்டம் தான் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளியின் கூலியும் குறைக்கப்படுகிறது.

இப்படித் தொடர் வேதனையால் நூல் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் நகர், என் எம்.எஸ்.காம்பவுண்ட், ராமசாமி கவுண்டர் வீதி, சொக்கநாதர் கவுண்டர் வீதி, பிரிந்தாசாரி வீதி, அகில்மேடு வீதி, இந்திராநகர் உட்பட பகுதிகளில் உள்ள பத்தாயிரம், ஜவுளிக் கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப்பட்டன. இன்று கடை அடைப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கலைச்செல்வன் கூறும்போது, ''சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40 ம் நம்பர் நூல் ஒரு கிலோவுக்கு ரூபாய் 80 வரை உயர்ந்துள்ளது. 30 ம் நம்பர் நூல் ரூபாய் 90 க்கும், 20 ம் நம்பர் நூல் விலை ரூபாய் 50, வெப்ட் 40-ம் நம்பர் ஒரு பாக்கெட் ரூபாய் 11,000 இருந்து ரூபாய் 14, 200 வரையிலும் உயர்ந்துள்ளது. அதனை ஆர்டர் பெற்ற தொகைக்குள் நிறைவு செய்ய முடியாமல் கடும் நஷ்டத்தை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. நூல் விலையை இரண்டு மாதம் அல்லது ஒரு மாதம் ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒருநாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூபாய் 150 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்தது மொத்தம் 300 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது." என்றார்.

நூலுக்கு மூலப்பொருள் பஞ்சு அந்த பஞ்சை உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பஞ்சு விலை ஏறவில்லை. பஞ்சை விலைக்கு வாங்கி பெரும் நிறுவனத்திடம் விற்பனை செய்யும் இடைத்தரகர் என்கிற ஏஜென்சி ஒரு வித லாபம் பார்க்கிறார்கள். நூல் விலையை நாளுக்கு நாள் விலையேற்றி ஜவுளி தொழிலில் ஈடுபடும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். இருந்தும் பராமுகமாக இருக்கிறது மத்திய அரசு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT