Skip to main content

காலபைரவர் கோவிலில் வைகுண்டராஜன் நடத்திய யாகம்! - பின்னணி என்ன?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் கோரப்பட, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான (6-ஆம் தேதி) இன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம், விருதுநகர் மாவட்டம் -  காரியாபட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வைரவநாங்கூரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலுக்கு  வைகுண்டராஜன் வந்தார். அவரது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய போலீஸ்,  அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பி.கே.லாட்ஜ் என்ற பெயரில் விடுதி நடத்தும் பி.கே.கண்ணன் மற்றும் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியில் இருந்து புரோகிதர் அழைத்து வரப்பட்டு யாகம் நடத்தினார்கள். யாகக் குண்டத்தில் அனைத்து வகையிலான சாதங்களும், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களும் போடப்பட்டன. காலை 9 மணியிலிருந்து 10-30 வரையிலான ராகு காலத்தில், ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர். 11.00 மணிக்கு மேல்தான், கோவிலில் இருந்து கிளம்பினார் வைகுண்டராஜன்.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

திருநெல்வேலி மாவட்டம், கீரைக்காரன் தட்டு கிராமத்திலிருந்து, விருதுநகர் மாவட்ட ஸ்ரீகாலபைரவர் கோவிலுக்கு வந்து, எதற்காக யாகம் நடத்தினாராம் வைகுண்டராஜன்?

 

அந்தக் கோவில் தரப்பில் “தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் எதிரிகள் பலமிழப்பார்கள். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் பலப்படும். ஆபத்திலிருந்து காப்பதற்கே தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடத்தப்படுகிறது. அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. மேலும், தேய்பிறை அஷ்டமியானது மரண பயத்தைப் போக்கும் அற்புதமான வழிபாடாகும். சிவாலயங்கள் அனைத்திலும், திறக்கும்போதும், இரவில் கோவிலை மூடும்போதும், பைரவ பூஜை நடக்கும். சிவன் சொத்துகளை காவல் காக்கும் அதிகாரியாகவும், நாயை வாகனமாகக் கொண்டு திகம்பரராகக் காட்சி தருபவராகவும் ஸ்ரீகால பைரவர் இருக்கிறார். இவரே, கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பல்வேறு ரூபம் கொண்டவராகத் திகழ்கிறார்” என்று பரவசத்துடன் கூறினார்கள்.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

கொலை மிரட்டலைத் தொடர்ந்து,  தனது குடும்பத்தாரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் வைகுண்டராஜன் புகார் தர, பாதுகாப்புக்காக சுழற்சி அடிப்படையில், ஆயுதம் தாங்கிய போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிரிகள் பலமிழந்து, வைகுண்டராஜன் பலம் பெறுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது இந்த யாகம்!


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.