Skip to main content

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களைப் பார்த்து பயப்படுவதில்லை;எழுத்துக்களை பார்த்துத்தான் பயப்படுகிறார்கள்- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

புதுக்கோட்டையில் 3 வது புத்தக திருவிழா 15 ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.  புத்தகத் திருவிழாவில் வாழ்க்கை அழைக்கிறது என்ற தலைப்பில் ஆற்றிய உரை:

 

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இரவு, பகல் வருகிறது. ஆனால் ஒன்று போல எல்லோருமாக வாழ்கிறோமா? இங்கே ஆணுக்குக் கிடைக்கிற அதிகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. அதுவும் சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு கிடைப்பது எல்லாம் அவமானங்களே! சிறகுகள் கொடுத்து மகளை வளர்க்கிறோம். திருமணம் செய்து வைக்கும்போது முதலில் முறிக்கப்படுவது அந்தச் சிறகுகளைத்தான். எவ்வளவு திறமைமிக்கவளாக இருந்தாலும் அங்கு வெறும் பெண்தான். முதலில் சுதந்திரத்தை வீட்டில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். 

 

writer s.ramakrishnan speech!!

 

ஒரு காலத்தில் பிள்ளைபிடிப்பவர்கள் இருந்ததாக அறிய முடிகிறது. இன்றைக்கு நர்சரிப் பள்ளிகள் அந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. குழந்தைக்கு தரமாக கல்வி அவசியம்தான். ஆனால், அது எந்த வயதில், எந்தமாதியான கல்வி என்பது முக்கியம். வண்டிக்கு பெட்ரோல் நிரப்புவது போல குழந்தைக்கு கல்வியை புகட்ட நினைப்பது தவறு. அது வாழ்க்கையை புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும்.

 

இன்றைக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமக்கு கசக்கிறது. அறிவுரை என்பது அனுபவம். அது முக்கியம். மூத்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். நாளை நாம் அந்த கட்டத்தை அடைந்தே தீருவோம் என்பதை மறந்துவிடாதீர்கள். தாத்தாக்களை பேரன்களோடு பேசவிடுங்கள். மனிதகுல வரலாறு குழந்தைகள் வழியாக மீண்டும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

 

கற்றறிந்த உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகனுக்குக்கான மரியாதைகூட தரப்படுவதில்லையே என்று ஒரு கல்லூரி விழாவில் என்னிடம் கேட்டார்கள். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு என்ன மரியாதை இருந்தது. ஆனால், 2500 ஆண்டுகளாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கவிச்சக்கரவர்த்தி கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், கபிலர், சேக்கிழார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி நடத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கும் அவர்களைக் நாம் கொண்டாடுகிறோமே! கலைகள் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும். தமிழில் எழுதுகிறோம் என்பதே எனக்குப் பெருமைதான்.

 

ஒரு முழு நிலவை பாலைவனத்தில் நின்று ரசித்துப் பாருங்கள் பரவச நிலையை அடைவீர்கள். அது உண்மையிலேயே அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் ஒவ்வொரு நாளும் அது உங்களுக்கு கற்றுத்தரும். வாழ்கை ஆயிரம் கோடி இன்பம் கொண்டது. ஒரு சாதாரண மீன் கடலைத் தாண்டிச் செல்கிறது. சைபீரியாவில் உள்ள ஒரு பறவை இங்கு வந்து முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. மனிதன் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்கிறான். உங்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவத்திற்கு இடையேதான் வாழ்க்கை இருக்கிறது.

 

இதர திருவிழாக்களைப் போல புத்தகத் திருவிழாக்களை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. இதுபோன்ற சிறிய ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது மிக முக்கியமான பணியாகும். தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் ஒரு பண்பாட்டு இயக்கமாக, அறிவு இயக்கமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாமே இதுபோன்ற விழாக்கள். புத்தகத் திருவிழாக்களில் பேச அழைக்கும்போதெல்லாம் நான் மறுப்பே சொல்வதில்லை. காரணம் இங்குதான் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.

 

நான் படித்த எந்தப் புத்தகமும் என்னை தவறாக வழிநடத்தியதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களைப் பார்த்து பயப்படுவதில்லை. எழுத்துக்களை, கலைகளைப் பார்த்துத்தான் பயப்படுகிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் புத்தகங்களில்தான் இருக்கிறது. புத்தகத் திருவிழா என்பது வெறும் வணிகச் சந்தை அல்ல. அது அறிவை அச்சிட்டுத்தரும் பொக்கிசம். நீங்கள் அறிவைப் பெறுங்கள். பெற்ற அறிவை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.