publive-image

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திருச்சியில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இதை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்தக் கண்காட்சியை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் விமல் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் இந்த கண்காட்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அமைச்சர் நேரு. மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளார். இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் குறித்து பார்க்காத புகைப்படம் எல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

முதல்வர் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அவரின் உழைப்பு தான் காரணம். அவரது உழைப்பு மக்களுக்கு தெரியும் வகையில் சென்றடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. கலைஞர், ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என சொல்லுவாராம். அந்த சொல்லுக்கு ஏற்றார்போல் முதல்வரும் உழைப்பு உழைப்பு என்று தான் இருந்துள்ளார். தமிழகத்தில் அவரது கால் படாத இடமே இல்லை. அனைத்து இடத்திற்கும் சென்று மக்களை சந்தித்துள்ளார். அந்த அன்பு தான் அவரை முதலமைச்சராக ஆக்கியுள்ளது.

கண்காட்சியில் புதிய புகைப்படங்களை பார்த்தோம். அதில் கலைஞருடன் அவர் ஒரு புகைப்படம் எடுத்திருப்பார். அதைப் பார்த்தேன். அந்த புகைப்படத்தில் முதலமைச்சர் கலைஞரை அப்பா என்று சொல்வதா தலைவா என சொல்வதா எனும் ஏக்கம் முதல்வர் முகத்தில் தெரிந்தது. அதன் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அப்பா என்று உங்களை ஒரு முறை அழைத்துக்கொள்ளவா தலைவா? என்று எழுதி இருந்தது. மனதை உணர்ச்சிவசமான நிலைக்கு ஆக்கியது” என்றார்.