Skip to main content

உலக சுற்றுச்சூழல் தினம்; உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவர்கள்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

world environmental day celebrated trichy

 

தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா ‘பிளாஷ்டிக் எனும் எமன்’ என்னும் விழிப்புணர்வு கையேடு வழங்குதல் மற்றும் துணிப்பை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடையே மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.

 

அப்போது அவர் பேசுகையில், "2023 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வதற்கு உரியத் தீர்வுகள்' ஆகும். இந்த கருப்பொருளை வலியுறுத்தும் விழிப்புணர்வுபடி நாம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, பிளாஸ்டிக் மாசு ஏற்படாமல் காக்க வேண்டும். சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி மேலும் மேலும் இந்த பூமியில் `சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்குத் தான் ஆபத்து விளைவிக்கும்.

 

சுற்றுச்சூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இந்த சம நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி முன்னோர் வழிபட்டதால், அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்" என்றார்.

 

தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் மாணவர்களிடையே பிளாஸ்டிக் தீமை குறித்தும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து நீர்நிலைகளில் மண்டிக் கிடக்கும் நெகிழிகள், சிற்றுயிர்கள் தொடங்கி பேருயிர்கள் வரை ஏற்படுத்தும் தீங்குகளை எடுத்துரைத்து நெகிழிப் பயன்பாடுகளின் பெருந்தீமை குறித்து உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஆர்.கே. ராஜா, சாத்தனூர் குமரன், ஆசான் கார்த்திக், சந்தியா, ஹேமா, சர்மிளா, அகிலா உள்ளிட்ட சிலம்பம் மாணவர்கள் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.