Skip to main content

கரோனா ஊரடங்கால் 100 கி.மீ. சைக்கிளில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

workers of ariyalur pedals cycle for 100 kms to work place

 

கரோனா ஊரடங்கினால் வேலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இல்லாமல் 100 கி.மீ தூரம் சைக்கிலிலேயே வேலைக்குச் செல்கின்றனர் அரியலூர் மாவட்ட மக்கள்.

 

உலகமே கரோனாவால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வந்தாலும் பல்வேறு புதுப் புது அனுபவங்களையும் தந்துள்ளது. காலம் தந்த பாடமா? இல்லை கரோனா தந்த பாடமா? எனப் பட்டிமன்றமே வைக்கலாம். அரியலூர் மாவட்டத்திலும் கூலித்தொழிலாளர்கள் தங்களது அன்றாட பிழைப்பை நடத்துவதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள்.

 

அதில் அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் அன்றாடப் பிழைப்புக்காக தினந்தோறும் பேருந்தில் அரியலூர் நகரத்தைச் சுற்றி வேலைக்குச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கரோனா ஊரடங்கால் பேருந்துப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர். அன்றாடம் வீட்டுச் செலவுக்கே திண்டாடிய வேளையில் கூலித்தொழிலாளர்கள் இனியும் வீட்டில் முடங்கிக் கிடந்து பலனில்லை, டூவீலர் வாங்கவும் வசதியும் இல்லை. ஆனாலும் பழகிக் கொள்வோம் என முடிவெடுத்து பரண் மேல் மூட்டைக்கட்டி வைத்திருந்த பொருட்களைத் தூசி தட்டி பழைய பொருட்களைப் பயன்படுத்துவது போல பழைய சைக்கிளைம் உருண்டோட சின்னச் சின்ன பழுதுகளை நீக்கித் தயார் செய்தனர்.

 

இதுகுறித்துக் கூலித்தொழிலாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, “சைக்கிள் பயணத்துக்கு முன்னாடி நடந்தே போயித்தான் வேலை பார்த்து வந்தோம். அப்புறமா ஊருல ஒரு சிலர் தான் சைக்கிள் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் நிறைய சைக்கிள் வந்துச்சு அதுக்கப்புறம் 1990 களுக்குப் பிறகுதான் டூவீலர் பரவலாச்சு. மக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இப்ப 2020ல டூவீலர் இல்லாட்டி எங்கேயும் போக முடியாதுங்கிற நிலை இருக்குதுங்க. தற்போது கரோனா ஊரடங்கால வெளியில டூவீலர் இல்லாதவங்களால எங்கேயும் போக முடியாம சிரமமாக இருந்துச்சு. இனியும் நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி மீண்டும் சைக்கிள் எடுத்துட்டோம். ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் அரியலூர் போயி வேலை செய்து குடும்பத்த காப்பாத்தறோம். இதனால காலையில ஆறு மணிக்கு சைக்கிள எடுத்திட்டு 8 மணிக்கிளாம் வேலைக்கு போயிறனும் மாலையில 4 மணிக்கு எல்லாம் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு இருட்டுவதற்குள் வீடு திரும்பிடுவோம்” எனக் கூறினர்.

 

மேலும் கூறுகையில், “டிராபிக் போலீசார் மறித்து இன்ஷ்யூரன்ஸ் லைசென்ஸ் இருக்கா ஆர்சி புக் இருக்கானு கேட்கறது இல்ல. இன்னும் சொல்லப் போனால் பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் கவலையில்லை. சைக்கிள மிதிக்கிறதுனால உடம்புக்கும் நல்லது,” என்றனர். “எங்களைப் போல நீங்களும் சைக்கிளுக்கு மாறிட்டீங்கனா பெரும் செலவு குறையும். நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் வாழலாம் அதிக பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு வராது உலக வெப்பமயமாதலிருந்தும் நம்மல நம்ம தலைமுறையைக் காப்பாத்திக்கலாம்,” என்று கரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் சைக்கிள் பயணத்துக்கு மாறிய கூலித்தொழிலாளர்கள் நீண்ட அனுபவத்தை விளக்கினர்.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும், ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர்கள் சைக்கிளில் வேலைக்குச் செல்வது என்பது மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. ஓரளவிற்கு மேல் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சீராக்க, அவர்கள் பணிக்குச் செல்ல போதிய வசதிகள் இருக்கும் வகையில் ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கான தீர்வு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.