ஈரோடு கஸ்பாபேட்டை, எம். மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். மனைவி தனலட்சுமி மூத்த மகன் பிரகாஷ் மற்றும் இளைய மகனுடன் வசித்து வந்தார். மூத்த மகன் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள பட்டன் கடையில் வேலை பார்த்து வந்தார். சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பிரகாஷ் தனது மனைவி, அப்பா, அம்மா, தம்பியுடன் கஸ்பாபேட்டை, சாந்தி நகரில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் நாட்டு கோழி கறி வாங்கி வந்தார். அதனை சமைத்து அனைவரும் சாப்பிட்டனர். பிரகாஷ் மது அருந்தி இருந்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் இரவில் பிரகாஷ் எழுந்து மனைவியிடம் எனக்கு பசிப்பதாக கூறி சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி சந்தியா கோழிக்கறியும் சாப்பாடும் கணவருக்கு கொடுத்துள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென பிரகாஷ் வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் கை, கால்களை இழுத்தவாறு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பிரகாஷை கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாலுகா போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.