பெரியார் சிலை சர்ச்சை கருத்து குறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் விளக்கம் ஏற்புடையதல்ல என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கக்கூடிய விஷயங்கள் வேதனை அளிக்கிறது. திரிபுராவில் நடந்த சிலை அகற்றும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரியார் சிலைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அவமானம், இதையெல்லாம் பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளப்பூர்வமாக வேதனை அடைகிறோம்.

Advertisment

இந்தச் செயல்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜக-வால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை பிரதமரும், பாஜகத் தலைவர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான நிலையில், எவருடைய சிலையை யார் அவமானப்படுத்தினாலும் அதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. அது பாஜகவின் நிலைப்பாடும் இல்லை. அவ்வாறு செயல்படுபவர்கள் பாஜகவிற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை, அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்துள்ளார். இதை விளக்கத்தோடு விட வேண்டும். அவ்வளவு தான். பெரியார் சிலை அவமானப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஹெச்.ராஜா மீது என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை கட்சி முடிவு செய்யும். ஹெச்.ராஜாவின் விளக்கம் காலதாமதமானது தான். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Advertisment