Skip to main content

விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரி 2 வது நாளாக பெண்கள் போராட்டம்; போலீசார் காலில் விழுந்து பெண்கள் கோரிக்கை...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

tasmac

 

அதனைத் தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன் குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப் பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது.  அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள். 


அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. 
 

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதி பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடை முன்பு திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாட முயன்றனர். 
 

பெண்களின் ஆவேச போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் இந்த டாஸ்மாக் கடையால் தான் பொன்பரப்பியில் கலவரம் ஏற்பட்டது. இப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. விவசாயப் பகுதிகளில் ஆங்காங்கே மதுப்பிரியர்கள் குடித்து விட்டு பாட்டிலை போட்டு உடைப்பதோடு அங்கு வரும் பெண்களையும் ஆபாசமாக பேசுகின்றனர். இந்த கடை வந்த பின்னர் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்


நேற்றைய போராட்டத்தை தொடர்ந்து இன்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது‌. பேச்சுவார்த்தை முடிவில் மூன்று மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் 10 தினங்களுக்குள் மூட வேண்டும் என்று கூறி வெளியேறினர்.
 

 அதன் பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு பெண்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து இந்த கடையை உடனடியாக மூடுங்கள் என்றனர். போலீசார் விரைவில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.