cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்து உள்ள குமாரபுரம் பகுதியில்உள்ள பெண்களிடம் "இந்தப் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தொடங்க இருப்பதாகவும் அதன்மூலம் கடன் வசதி மற்றும் அரசு உதவிகளைப்பெற்றுத் தருவதாகும்" ஒரு கும்பல்கூறியுள்ளது.

அவர்கள் கூறியதை அப்பகுதி பெண்களும் நம்பினர்.குழுவில் இணைப்பதற்கான படிவத்தை அந்தக் கும்பல் அனைவரிடமும் கொடுத்துள்ளனர். அந்தப் படிவத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி படமும், அதில் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை எனவும் அச்சிடப்பட்டிருந்தது.

இதுபற்றி அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தலைமையில் பொதுமக்கள் அந்தக் கும்பலிடம் சென்று நீங்கள் மகளிர் குழு ஏற்படுத்துவதாகக் கூறி விட்டு அரசியல் கட்சியில் எங்களை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு வந்துள்ளீர்களா. ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும். பெண்களிடம் மகளிர் குழு தொடங்குவதாக ஏன் பொய் கூறினீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.

Advertisment

அதற்கு அந்தக் கும்பல் நாங்கள் மகளிர் குழு தொடங்கவில்லை. கட்சியில் உறுப்பினர் சேர்ப்பதற்காக வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். இனிமேல் இதுபோன்று தவறாக எதுவும் நடைபெறாது என்று அந்தக் கும்பல் மன்னிப்புக் கேட்டுள்ளனர். பின்னர் பொதுமக்கள் அவர்களை எச்சரிக்கை செய்துஅனுப்பி உள்ளனர். மகளிர் குழுப் பெயரை வைத்து ஆந்திர அரசியல் கட்சியைத் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு ஒரு கும்பல் முயற்சி செய்து வருவதாக அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கூறுகின்றனர்.