Skip to main content

சங்ககால பொற்பனைக்கோட்டை கடந்து வந்த ஆய்வுப் பாதை... குவியும் பெண்கள்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!


புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டை என கருதப்படும் 1.62 கி.மீ சுற்றளவுள்ள கோட்டையில் தொல்லியல் ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாய்வு செய்து அங்கு கிடைத்த மண் பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களையும் செங்கல் அளவுகளையும் ஆய்வு செய்து இது சங்ககால கோட்டை என்பதை ஆவணப்படுத்தினார்.

 

அதன் பிறகு 2013 ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிஞர் பேராசிரியர் ராஜவேலுவின் அப்போதைய ஆய்வு மாணவரான புதுகை பாண்டியன் தகவலின் பேரில் நீர்வாவி குளத்தில் கிடந்த கல்லை ஆய்வு மாணவர் தங்கதுரை, மற்றும் முதுகலை மாணவர் மோசஸ் ஆகியோர் ஆய்வு செய்த போது 5 வரிகள் கொண்ட தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு மறுநாளே ஆவணத்தில் மாணவர்களின் பெயருடன் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டில் கால்நடைகளை கவர வந்தவர்களை எதிர்த்து போரிட்டு மடிந்த கணம் குமரனுக்காக நடப்பட்ட நடுகல் என்பது தெரிய வந்தது. பிறகு அந்த கல்லை தேடி பலர் வந்தாலும் கூட பாதுகாப்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!

 

இந்த கல்வெட்டின் அடிப்படையிலும் சங்ககாலம் என்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆசிரியர்மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கோட்டைக்குள்ளும் வெளியிடங்களிலும் மேலாய்வு செய்த போது இரும்பு உருக்கி ஆயுதங்கள் செய்தமைக்கான இரும்பு உருக்கு கழிவுகளும், இரும்பு உருக்கு உலைகளான சென்னாக்குழிகளும், சுடுமண் அச்சுகளும் கண்டெடுத்தனர். மேலும் பலவகையான பானை ஓடுகளும் கண்டெடுத்தனர். தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் 2019 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

 

வழக்கு விசாரனையின் போதே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முனைவர் இனியன் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய அனுமதி கேட்டு மத்திய தொல்லியல்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பலகட்ட பரிசீலனைக்கு பிறகு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு முதன் முதலில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்ததால் முனைவர் இனியனை அகழாய்வு செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறை மூலம் அகழாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!

 

அகழாய்வுப் பணிகளை கடந்த ஜூலை 30 ந் தேதி அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு வகையான ஓடுகள், இரும்பு ஆணி, மணிகள் கிடைத்திருக்கிறது. அகழாய்வுப் பணிகள் நடப்பதை அறிந்து தினசரி ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள்.

 

இந்தநிலையில் தான் சங்ககால கோட்டை முழுமையாக சுமார் 25 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் கொத்தளம் அகழியுடன் இருப்பதை சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மூடியுள்ளதால் கோட்டை மதில் சுவர் வெளியே தெரியவில்லை என்பதால் அகழாய்வுக் குழுவினர் மதில் சுவரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் கோட்டை முழுமையாக தெரியும் பார்வையாளர்களையும் கவரும் என்று அமைச்சர் மெய்யநாதன் மூலம் கோரிக்கை வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவில் திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் வேப்பங்குடி ஊராட்சி 100 நாள் பணியாளர்கள் மூலம் கோட்டை மதில் சுவர் மேல் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடியும் போது முழுமையான சங்ககால கோட்டையை காணமுடியும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.