கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்; இணையதளம் திறக்காததால் தவிக்கும் மகளிர் 

 Women suffering because the website is not open

கலைஞர் மகளிர் உரிமை தொகை தமிழ்நாட்டில் வசிக்கும் தகுதியான மகளிர் ஒவ்வொருவருக்கும் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களின் வாழ்க்கை தரம் உயரும், பொருளாதார வளர்ச்சி பெறும் என தொடக்கவிழாவில் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சில லட்சம் மகளிர்க்கு தகுதியிருந்தும் உரிமைத்தொகை வழங்கவில்லை என்கிற குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து கொள்ள பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் வழியாக விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் அல்லது பொதுமக்கள் நேரடியாகவும் அந்த இணையதளத்தின் வழியாகவும் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி முதல் இந்த இணையதளம் பெரும்பாலான நேரம் ஓப்பன் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் பொதுமக்களே தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, அதற்கு வரும் ஓ.டி.பி மூலமாக விண்ணப்பத்தின் நிலையை பார்க்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அதுவும் ஒர்க் ஆகவில்லை.

கடந்த 5 நாட்களாக இதே நிலையிலேயே அந்த இணையதளம் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை என்ன? எதனால் தங்களுக்கு உரிமைத்தொகை வரவில்லை எனத் தெரிந்துகொள்ள மகளிர் தங்களது பகுதி தாலுக்கா அலுவலகங்களில் வந்து குவிந்து தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிய முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Subscribe