அரசுப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

women incident youth arrested police dharmapuri district

தர்மபுரி அருகே அரசுப்பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் உணவகத்தில் பிரபு (வயது 25) என்ற வாலிபர் 6 மாதம் வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென்று வேலையை விட்டு நின்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மாணவியின் தாய் கர்ப்பப்பைச் சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு அவருக்கு ஆசை வார்த்தைகள்கூறி தன்னுடன் அழைத்துள்ளார். அதற்கு வர மறுத்த மாணவி, வீட்டிற்குள்சென்றுள்ளார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரபு, மாணவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அமர வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் மாணவியும் மறைத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், சில நாள்களுக்கு முன்பு அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போதுதான் அந்த மாணவி, பிரபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

மேலும், இதுகுறித்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆய்வாளர் லதா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) அவரைக் கைது செய்தார்.

dharmapuri incident Women
இதையும் படியுங்கள்
Subscribe