Skip to main content

மோர் மோசடி; கிரிவலப் பக்தர்களை ஏமாற்றும் பெண்கள்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

 Women cheating Krivalam devotees!

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நவம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது. ஆனால், அதைவிட அதிகளவு பக்தர்கள் வருகை தந்திருந்தனர். திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் 9 சாலைகளிலும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

 

கோவில் மாடவீதி, கிரிவலப்பாதை மற்றும் நகர பகுதிகளில் 200க்கும் அதிகமான இடங்களில் அனுமதி பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பக்தர்களை அழைத்து, அழைத்து உணவு வழங்கினார்கள். உணவு மட்டுமல்லாமல் பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், சுண்டல், பிஸ்கட் பாக்கெட்கள் என அண்ணாமலையாருக்கு வேண்டிக்கொண்டவர்கள் வழி முழுவதும் வழங்கிக்கொண்டே இருந்தார்கள். பக்தர்களும் விரும்பியதை வாங்கி சாப்பிட்டபடி கிரிவலம் வந்தார்கள்.

 

 Women cheating Krivalam devotees!

 

இதில் மோசடிகளும், மிரட்டல்களும் நடந்தது பக்தர்களை வேதனைப்பட செய்தது. 


மாடவீதி மற்றும் கிரிவலப் பாதையில் சில இடங்களில் இரண்டு இரண்டு பெண்களாக நின்று கொண்டு பெரிய சில்வர் அண்டாக்களில் மோர் வைத்துக்கொண்டு கிரிவலம் சென்று கொண்டு இருந்தவர்களின் கைகளை பிடித்து இழுத்து டம்ளர்களில் மோர் தந்து குடிக்கவைத்தார்கள். குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்துவிட்டு கிளம்பியவர்களிடம் மோர் தந்த பெண்கள், ‘எங்கப்போற ஒருடம்ளர் மோர் 10 ரூபாய் தந்துவிட்டு போ’ எனக்கேட்டனர். ‘நீங்களாதானே கையை பிடிச்சி இழுத்து தந்திங்க’ எனக் கேட்கும் பக்தர்களிடம், ‘நான் குடுத்தா நீ குடிப்பியா’ என சண்டை போட்டனர். இலவசமாக மோர் தருகிறார்கள் என நினைத்து வாங்கி குடித்த பொதுமக்கள் ஏமாந்து போய் அவர்களிடம் சண்டைப்போட விரும்பாமல் வேதனையுடன் அவர்கள் கேட்ட பணத்தை தந்துவிட்டு கிரிவலம் சென்றனர்.

 

 Women cheating Krivalam devotees!

 

இப்படிப்பட்ட பெண்கள் மாடவீதி, நகரப்பகுதிகளில் அதிகளவில் இருந்தனர். இந்த பெண்கள் பௌர்ணமி, தீபத்திருவிழா நாட்களில் இங்கு வந்துவிடுகிறார்கள். இவர்களின் குறி அப்பாவியாக இருப்பவர்கள்தான். குறிப்பாக கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாக பார்த்து அவர்களுக்கு மோர் தந்து குடித்த பின்பே பணம் வாங்குகின்றனர். காசா எனக் கேட்பவர்களிடம் முதல்ல குடிங்க எனச்சொல்லி குடிக்கவைக்கின்றனர். பலரும் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள், பால்பாயாசம் தருகிறார்கள், மோரும் இலவசம் என நினைத்து வாங்கி குடிக்கிறார்கள். புறப்படும்போதே காசு கேட்டு மிரட்டுவதால் நொந்துப்போய் வந்த இடத்தில் எதுக்கு பிரச்சனை என தந்துவிட்டு செல்கின்றனர். இது எல்லாம் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடக்கிறது. ஆனால் அவர்கள் கண்டுக்கொள்வதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் கிரிவலம் வந்த பக்தர்கள்.


படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.