Skip to main content

சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல்! 

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

Woman's body in bag

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள வட அகரம் கிராமத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வர். அதுபோல், நேற்று அந்தக் காட்டுப் பகுதியில் ஆடு மாடு மேய்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு சாக்கு மூட்டை கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. மேலும், அதில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதைப் பார்த்தவர்கள், ஊர்த்தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 


அதன்பேரில் சாக்கு மூட்டை கிடந்த இடத்திற்கு போலீசாரும், வனத்துறை அலுவலர்களும் விரைந்து சென்றனர். அந்தச் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இந்தப் பெண்ணின் உடலில் சுடிதார் துப்பட்டா போடப்பட்டிருந்தது. சாக்கு மூட்டையில் இருந்த சடலத்தைக் கைப்பற்றிய மரக்காணம் போலீசார் அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர், சாக்கு மூட்டையில் பிணமாக இருந்த அந்த இளம் பெண் யார்? காட்டுப் பகுதியில் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றது யார்? காதல் தகராறில் இந்த கொலை நடந்திருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்