Skip to main content

போன் மூலம் தொந்தரவு செய்த ஆண்! மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்! 

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

 The woman who was caught and handed over man to the police!

 

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கோகிலா(28). அங்கன்வாடி பள்ளி ஆசிரியர். இவரது தாய் வீடு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் அருகே பெருமாள்பாளையத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தான் படித்த கல்வி நிலையங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று பெற ஏப்ரல் மாதம் தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் திருப்பூர் செல்ல ஏப். 4ம் தேதி குளித்தலைக்கு தனது தம்பியுடன் சென்று அங்கிருந்து பஸ் ஏறி திருப்பூர் சென்றார். 

 

தனது கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையையும் துணிப்பையையும் பஸ்சில் தான் அமர்ந்த இருக்கைக்கு மேலே இருந்த கேரியரில் வைத்திருந்திருக்கிறார். திருப்பூரில் பஸ்சை விட்டு இறங்கும்போது, அவர் சான்றிதழ் இருந்த பையைக் காணவில்லை. உடனே திருப்பூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார். 

 

இந்நிலையில் ஏப். 9ம் தேதி ஒரு ஆண், கோகிலாவின் ஆதார் அட்டையிலிருந்த செல்போன் நம்பரை பார்த்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கோகிலாவின் சான்றிதழ்கள் பஸ்சில் கேட்பாரற்று கிடந்ததாகவும், அது தன்னிடம் இருப்பதாகவும் கூறி ரூ. 15 ஆயிரம் பணம் கேட்டு அடிக்கடி போன் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதனை நம்பி அவரிடம் வங்கி சேமிப்புக் கணக்கு எண் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு முதலில் ரூ.1,000 அனுப்பினார். இதனைத் தொடர்ந்து துறையூர் எஸ்.பி.ஐ வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்த போது அந்த மர்ம நபர் துறையூர் அருகே நக்கசேலத்தைச் சேர்ந்த வடிவேலுவின் மகன் பாலமுருகன் (40) என்பது தெரிந்தது. 

 

இந்நிலையில் ஒரு கட்டத்தில் கோகிலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பாலமுருகன், தனியாக வந்து தனிமையிடத்தில் தன்னை சந்தித்தால் சான்றிதழ்களை தருவதாக செல்போனில் கூறியுள்ளார். இதனை கோகிலா தனது கணவரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கோகிலா குடும்பத்தினர் பாலமுருகன் போக்கிலே சென்று அவரிடமிருந்து சான்றிதழ் பெற முயற்சித்தனர். தொடர்ந்து பாலமுருகனிடம் பேச்சுக் கொடுத்து அவரை துறையூர் பஸ் நிலையத்துக்கு கோகிலா நேற்று வரவழைத்தார். தன்னுடன் தனது கணவர் பழனி, தாய் ஜோதிமணி, தம்பி ராஜசேகரன் ஆகியோரையும் துணைக்கு அழைத்துச்சென்று பாலமுருகனை பிடித்தார். பின்னர் அவரிடமிருந்த தனது கல்வி சான்றிதழ்கள், ஆவணங்களை வாங்கிக் கொண்ட கோகிலா அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து பாலமுருகனை துறையூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது