
கொலை செய்யப்பட்ட இளைஞர் ஜோதிமணி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் இளைஞனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இறந்து கிடந்தவர் வேடசந்தூர் பூதாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரரருடைய மனைவி கோமதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமணமான சில நாட்களில் ஜோதிமணியை அவரது மனைவி விட்டு சென்றதால் கோமதிக்கும் ஜோதிமணிக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோமதியின் உறவுக்கார நபரான ஸ்டாலின் என்பவருடன் கோமதிக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி ஜோதிமணியை தவிர்த்து வந்துள்ளார்.
இதனையறிந்த ஜோதிமணி கோமதியை கண்டித்து வந்துள்ளார். இந்த முறையற்ற தொடர்பை கோமதியின் கணவரான ராணுவ வீரரிடம் தெரிவித்து விடுவேன் ஜோதிமணி மிரட்டியுள்ளார். இதனால் கோமதியும் ஸ்டாலினும் இளைஞர் ஜோதிமணியை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

கைது செய்யப்பட்ட கோமதி உள்ளிட்ட 6 பேர்
திட்டத்தின் படி சம்பவத்தன்று ஜோதிமணிக்கு பிடித்த உளுந்தங்களி செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார் கோமதி. அங்கு வந்த ஜோதிமணி உளுந்தங்களி சாப்பிட்டுள்ளார். அதேபோல் கோமதி கொடுத்த காபியையும் அவர் குடித்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜோதிமணி மயங்கி விழுந்துள்ளார். காரணம் முன்னதாகவே கோமதி உளுந்தங்களி மற்றும் காபியில் தூக்க மாத்திரையை கலந்து வைத்த நிலையில் அதை சாப்பிட்ட ஜோதிமணி மயங்கியுள்ளார்.
உடனடியாக அங்கு வந்த ஸ்டாலின் கோமதியுடன் சேர்ந்து ஜோதிமணியன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். உயிரிழந்த ஜோதிமணியின் உடலை தூக்கி கிணற்றில் வீசுவதற்கு உடந்தையாக ஸ்டாலினுடைய நண்பர்களான ஆரோக்கியசாமி, குட்டி ஆகியோர் உதவியுள்ளனர். இப்படியாக இந்த கொலை தொடர்பாக கோமதி, ஸ்டாலின், ஆரோக்கியசாமி, குட்டி, கோமதியின் தாய், தந்தையென ஆறு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.