
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி, பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை (வயது 21). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
இந்த நிலையில், பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன் இருவரின் காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கான் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. இந்நிகழ்வு பார்ப்போரின் மனதை நெகிழவைத்தது.

இதற்கு முன்னதாக தாய்மாமன் சிலிக்கான் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது. அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது.
இதுபற்றி பாண்டித்துரையின் தாய் பசுங்கிளியிடம் கேட்ட போது, “அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது என்மகன் பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு. அதனை அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் இறந்து போனார். பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரை அச்சு அசல் உருவம் போலவே தத்ரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம். அதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது. பேரக்குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது. என் மகளின் ஆசையும் நிறைவேறியது. இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவானது” என்று கூறினார்.

தாய் மாமன் இறந்தபிறகும் அவரின் சிலையில் அமர வைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.