Skip to main content

தனிமைச்சிறையிலிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண்... வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பெண் தன்னுடைய இரு குழந்தைகளுடன் போலீஸாரை ஏமாற்றி ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலையிலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்ல முயற்சிக்கையில், ஆம்புல்ன்ஸை விரட்டி சேஸிங் செய்து மடக்கி பிடித்து மூவரையும் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் திருவாடனை உட்கோட்டப் போலீசார்.

 

 Woman trying to escape from an ambulance in private ...

 

கரோனா வைரஸ் தொற்று நோய்க் காரணமாக வெளிநாட்டினர், வெளிநாட்டிலிருந்து திரும்பியோர், அவர்களுடனான தொடர்பிலிருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து தங்களது மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன மத்திய மாநில அரசுகள். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு போக, ஏனையோர் அவர்களுடைய வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பின் காலமாக 28 நாட்களிலிருந்து 14 நாட்கள் வரை என வரையறைப்படுத்தியுள்ளது அரசு. இது இப்படியிருக்க, மருத்துவக்கண்காணிப்பிலுள்ள சிலர், கரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ கெடுபிடிகளுக்கு பயந்து எஸ்கேப்பாகியதும் உண்டு. இந்நிலையில், 28ம் தேதி இரவில் சிவகங்கை - ராமநாதபுர மாவட்ட எல்கையான கருமொழி சோதனை சாவடியில் ராமநாதபுர மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் இளவேனில், திருவாடனை காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.சுல்தான் இப்ராஹிம் மற்றும் திருப்பாலைக்குடி காவல்நிலையத்தினை சேர்ந்த போலீஸ் முத்து ஆகியோர் பாதுகாப்பில் இருந்தபொழுது TN55-BB-8448 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற ஆம்னி வகை ஆம்புலன்ஸை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக விராமலையிலிருந்து ராமநாதபுரம் ஒருவரும், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் ஆம்புலன்ஸிலுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறிக் கொண்டிருந்த வேளையில், " அது டிஎஸ்பி-க்கு சொந்தமான வண்டி" என டிஎஸ்பி அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசுவதாக எஸ்எஸ்ஐ-க்கு தகவல் வர, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் அந்த ஆம்புலன்ஸை சேஸிங் செய்து மடக்கி பிடித்து போலீசார் திருவாடனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

 Woman trying to escape from an ambulance in private ...


 "அந்த ஆம்புலன்ஸை விடுவிக்க ஒன்றிற்கும் மேற்பட்ட டிஎஸ்பி ராங்க் அதிகாரிகள் பேசியதும், வாகனத்திற்குள் இருந்த அவர்களின் தோற்றமும் எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே மடக்கி பிடித்து விசாரித்தோம். அந்த ஆம்புலன்ஸிற்குள் இருந்த பெண்ணின் பெயர் லதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது). உடனிருந்தது அவருடைய 11 வயது மகள் மற்றும் 8வயது மகனுமே.!!! சமீபத்தில் தான் அபுதாபியிலிருந்து சென்னைக்கு திரும்பியிருக்கின்றார்கள். சென்னை பம்மலில் உள்ள வீட்டில் இவர்கள் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி விராலிமலை வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றிருக்கின்றார். இதற்காக ஒவ்வொரு செக்போஸ்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும்  ஒரு டிஎஸ்பியின் பெயரைக் கூறி தப்பியிருக்கின்றார்.அது இங்கேயும் கூறப்பட இப்பொழுது சிக்கியுள்ளார். ஆம்புலன்ஸின் உரிமையாளர், டிரைவர் உட்பட அனைவரின் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்கின்றனர் திருவாடனை போலீசார். மருத்துவப் பரிசோதனையின் முடிவில் பெண் குழந்தைகள் உட்பட மூவருக்கும் கரோனா தொற்று இல்லை எனினும் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அந்த டிஎஸ்பி பெயரைக் கூறி ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண் சென்னையிலிருந்து விராலிமலைக்கு வந்தது எப்படி..? சட்டத்தினை மீறி இவர்களுக்கு எதற்காக டிஎஸ்பி உதவவேண்டும்..? இன்னும் எத்தனை நபர்களை அவர் அனுப்பியிருக்கக்கூடும்..?" என பல கேள்விகளுடன் டிஎஸ்பியின் தரவுகளை ஆராய்ந்து வருகின்றது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.