வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் பெண் கண்ணீர் மல்க தன்னை மீட்குமாறு கணவருக்கு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்று சிக்கியுள்ளதன் மனைவியை மீட்டுத்தரக் கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட், வ.உ.சி நகர் பகுதியைச்சேர்ந்தவர் அருண்(33). இவர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சலீமா (31) இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் சலீமா வீட்டு வேலை செய்வதற்காக துபாய் சென்றுள்ளார். தனது உறவினர் பெண் அங்கு உள்ள காரணத்தினால் ஏஜண்ட் மூலமாக துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்
இந்நிலையில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு சலீமா செல்போன் வாயிலாக அருணை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது பேசிய அவர் தான் தற்போது ஓமன் பகுதியில் உள்ளதாகவும் இங்கு தன்னை தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துவதாகவும் சிலர் தன்னை தாக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்துஅருண் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் இது குறித்து தன் மனைவியை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்திருந்தார்
இந்நிலையில் நேற்று சலீமா வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது கணவரான அருணுக்கு அனுப்பியுள்ளார். அதில், எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னால் பணியாற்ற முடியவில்லை. என்னுடைய செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு ஆபசமாக பேசி அவமானப்படுத்தி அடித்து துன்புறுத்தி ரூ. 2 லட்சம் தருமாறு மிரட்டுகின்றனர். உண்பதற்கு உணவு குடிக்க தண்ணீரும் கூட இல்லாத நிலையில் உள்ளேன்.என்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார்
அதன் அடிப்படையில் அருண்குமார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் மகனுடன் வந்து தன் மனைவியை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கினார். மேலும் தன் மனைவியை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்