சேலத்தில், தன் பேச்சை மனைவி கேட்காததால் விரக்தி அடைந்த பெண் காவலரின் கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடாஜலபதி (50). பி.இ., பி.எல்., படித்துள்ளார். இவருடைய மனைவி காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏப். 6 ஆம் தேதி காலை கையில் பெட்ரோலுடன் வெங்கடாஜலபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென்று அவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவருடைய சட்டையில் தீ பற்றியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள், பாய்ந்து சென்று வெங்கடாஜலபதி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவத்தின்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். அவரை நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர், ''எனது மனைவி, அவருடைய சகோதரியின் வழிகாட்டுதலின் பேரில் தவறான பாதையில் செல்கிறாள். என் பேச்சை கொஞ்சம் கூட கேட்டு நடப்பதில்லை. என்னை வீட்டுக்குள்ளும் அனுமதிப்பதில்லை. எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டை விட்டே சென்று விடுகிறேன் என்று கூறினேன். அதற்கும் அவள் உடன்படவில்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்'' என்று கூறியுள்ளார்.
காவல்துறையினர் அவருக்கு அறிவுரைகள் வழங்கியதோடு, வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பெண் காவலரின் கணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.