Skip to main content

கிணற்றில் குதித்து தற்கொலை; தாயைக் கட்டியணைத்திருந்த குழந்தை!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

woman passes away with her children

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜே.சி.பி. ஆபரேட்டர் சரவணன்(30). இவர் சேலத்தில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், மனைவி தங்கமணி(26) தனது மகள்கள் ஸரோண்யா(6), பிரித்திகா(3) மற்றும் மகன் லட்சித்(1½) ஆகியோருடன் மாமனார் பொன்னுச்சாமி வீட்டில் வசித்து வந்துள்ளார். 

 

இந்நிலையில் வீட்டிலிருந்த மாமனார் – மருமகளிடையே நேற்று குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிற்பகலில், தங்கமணி தனது மகள் பிரித்திகா மற்றும் மகன் லட்சித் ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. இரவு வரை வீடு திரும்பாத தங்கமணியை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் தங்கமணி கையில் வைத்திருந்த கைப்பை, காலணிகள் அருகேயுள்ள பயன்பாட்டில் இல்லாத 60 ஆடி ஆழ தனியார் கிணற்றில் இன்று காலை மிதப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. 

 

அந்தத் தகவலையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி இறங்கி முதலில் தாய் தங்கமணி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது தாய் பிடியில் பச்சிளம் குழந்தை லட்சித் கட்டியணைத்தபடி சடலமாக மிதந்தது காண்போரைக் கண் கலங்கச் செய்தது. அதனைத் தொடர்ந்து பிரித்திகா உடலும் மீட்கப்பட்டு, மூவர் சடலங்களும் உடற்கூறாய்விற்காக மணப்பாறை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணப்பாறை போலீசார், தாய் மற்றும் குழந்தைகள் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்