
திண்டுக்கல் அய்யனூர் மலைப்பகுதி அருகே தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அய்யனூர் காக்காயன்பட்டியைச் சேர்ந்த பாலுச்சாமி என்பவரின் மகள் செல்வராணி (20). கடந்த 8ஆம் தேதி வீட்டில் இருந்து காணமல் போன இவர், காக்கையனூர் அருகே குண்டாங்கல் வனப்பகுதி அருகே தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊர் கட்டுப்பாடு எனக்கூறி வெளியே தெரியாமல் அவரது உடலை எரியூட்டிய கிராம மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூடாது என செல்வராணியின் பெற்றோரைத் தடுத்துள்ளனர். இருந்தபோதிலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என செல்வராணியின் பெற்றோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகள் கொலை செய்யப்பட்டாளா? என்று சந்தேகத்தை எழுப்பிய உறவினர்கள், உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து செல்வராணியின் தாத்தா பிச்சை என்பவர் கூறியதாவது, “சங்கர் என்ற பாலாஜி என்ற ஒருவர், பெண்ணிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அதனால் அப்பெண்ணும் கற்பமுற்ற நிலையில், சங்கரிடம் தன்னை திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளார். அதற்கு சங்கர், தனக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக் கூறி மறுத்துள்ளார்.
சங்கர் மறுக்கவே உடனே அந்தப் பெண் அவனிடம், “என்னை திருமணம் செய்யாவிட்டால் போலீஸிடம் புகார் அளிப்பேன்” என்று கூறியுள்ளார். அதற்கு சங்கர், “நீ உயிரோடு இருந்தால்தானே போலீஸிடம் புகார் அளிப்பாய்” என்று மிரட்டி, சொந்தக்காரர்களோடு சேர்ந்து அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளார். பின்னர் ஊருக்கு அப்பாற்பட்ட வனப்பகுதியான குண்டாங்கல் என்ற இடத்தில் அந்தப் பெண்ணை தூக்கில் தொங்கியதுபோல் தொங்கவிட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.