Skip to main content

சித்தியை கொலை செய்த கொழுந்தனார் மகன்.!!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

woman passes away by their relations son

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது ஆங்கியனூர். இந்த ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி, 50 வயது நிரம்பிய அமராவதி. இவர் அந்த ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் (16.05.2021) தனது வீட்டுக்கு வெளியில் அமர்ந்து சமைப்பதற்காக அரிசியை முறத்தில் போட்டு புடைத்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் அவரது கொழுந்தனார் சின்னத்துரை என்பவரது மகன் அசோகன் (38) அங்கு வந்துள்ளார். தனது சித்தி அமரவதியிடம் வம்பு பேசியுள்ளார். இதனால் அமராவதிக்கும் அசோகனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இதில் ஆத்திரமடைந்த அசோகன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சித்தி அமராவதியை தலை, கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அமராவதி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்தனர். உடனடியாக திருமானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அமராவதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அமராவதியின் கொழுந்தன் மகன் அசோகன், தனது சித்தியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

 

இதனை அறிந்த போலீசார் அசோகனை கைது செய்ய தேடிச் சென்றுள்ளனர். அப்போது அசோகன், தனது வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில்  இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டு இறந்துபோய் கிடந்துள்ளார். விசாரணைக்குச் சென்ற போலீசார் பிணமாக கிடந்த அசோகனின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அசோகன் ஏன் இவ்வளவு கொடூர செயலை செய்தார், அதன்பிறகு அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் அப்பகுதி மக்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில், அசோகன் கடந்த 10 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதித்த நிலையில் இருந்துள்ளார் என தெரியவந்தது. மேலும்  சில நேரங்களில் சுயநினைவுடன் இருப்பார், சில நேரங்களில் தன் சுய நினைவை இழந்து மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்துவார் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

 

இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட அசோகன் தனது சித்தி அமராவதியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். அசோகனுக்கு மனைவி, ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோன்று அமராவதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த சித்தியை மனநிலை பாதிக்கப்பட்டவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருமானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.