Skip to main content

கரும்புத் தோட்டத்தில் சடலமாக கிடந்த பெண்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Woman passed away, Police in intensive investigation

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகிலுள்ளது துலுக்க நத்தம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவரது மனைவி முத்தம்மாள்(55). இவர் அப்பகுதியில் கருவாடு, மீன் போன்றவற்றை கூடையில் சுமந்து சென்று ஊர் ஊராக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி  மீன் வியாபாரத்திற்குச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. முத்தம்மாளைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரது புகாரின் மீது இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துலுக்க நத்தம் கிராமத்திலிருந்து பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஒரு கரும்புத் தோட்டம் அருகே பெண்சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது முத்தம்மாள் மீன் வியாபாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கூடை கிடந்துள்ளது. அதனருகில் உடல் அழுகிய நிலையில் முத்தம்மாள் கிடந்துள்ளார். இறந்தது முத்தம்மாள்தான் என்பதை அவரது குடும்பத்தினர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர்.

 

அதன்பிறகு முத்தம்மாள் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு 40 வயதில் மீனா, 38 வயதில் வெள்ளையம்மாள், 32 வயதில் பாப்பாத்தி ஆகிய மூன்று மகள்களும் ராஜீவ்காந்தி என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாளின் பேரக் குழந்தைகளுக்கு காதணி விழா நடந்துள்ளது. அந்த விழாவில் மூன்று மகள்களும் மகனும் சேர்ந்து 5 சவரன் தாலி சங்கிலி முத்தம்மாளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். இது தவிர இரண்டரை சவரன் அளவிற்கு கம்மல் மற்றும் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசுகள் ஆகியவை அணிந்துள்ளார்.

 

அவர் அணிந்திருந்த நகைகள் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் இருக்கும். அவர் மீன் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு மாலை நேரத்தில தனது ஊருக்குத் திரும்பும்போது அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டுச் செல்வது உண்டு. அப்படி யாரிடமாவது லிப்ட் கேட்டு, அவரை வண்டியில் அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் நகைக்காக அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று மீன் வியாபாரம் செய்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.