Skip to main content

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவமானப்படுத்திய கும்பல்; உயிரை விட்ட இளம்பெண்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

woman passed away due usury chennai

 

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அகிம். இவரது மனைவி நூர்ஜகான் பாத்திமா. இந்த தம்பதிக்கு யாஸ்மின் என்கிற 26 வயது மகளும், ஜவகர் பரூக் என்கிற 24 வயது மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சையத் அகிம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது, கணவனை இழந்த நூர்ஜகான், தன் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

 

மேலும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நூர்ஜகான், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். அதே சமயம், பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும் குடும்ப தேவைக்காகவும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம், தனிப்பட்ட முறையில் நூர்ஜகான் பாத்திமா சிறுகச் சிறுக 8 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் வட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

 

ஒருகட்டத்தில் பணம் கொடுத்த கடன்காரர்கள், வட்டியுடன் சேர்த்து 18 லட்ச ரூபாயாக தர வேண்டும் என நூர்ஜகானை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நூர்ஜகான், வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் பதறிப்போன நூர்ஜகானின் மகன் ஜவகர், அவரைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனால், நூர்ஜகானை எங்கு தேடியும் கிடைக்காததால் 17ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

அப்போது தலைமறைவான நூர்ஜகான், தான் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் வீட்டில் இருப்பதாக செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஜவகர் வேலை சம்பந்தமாக  வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் அவரது சகோதரி யாஸ்மின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயம், வீட்டிற்கு வந்த கடன் கொடுத்த மூன்று பெண்கள், யாஸ்மினை தகாத வார்த்தையில் அவமானப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

 

இதனால், மனவேதனை அடைந்த யாஸ்மின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அப்போது வீட்டில் ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாததால் தனிமையில் வாடிய யாஸ்மின், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த ஜவகர், தன் சகோதரியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறியுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், யாஸ்மினின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இச்சம்பவம்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜவகர் பரூக் கந்துவட்டி கொடுமையால் தனது சகோதரி யாஸ்மின் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயம், கந்துவட்டி கொடுமையால் அவமானப்படுத்தப்பட்ட பெண், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.