Skip to main content

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண் கொடூரக் கொலை!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Woman passed away after paying interest in Coimbatore

 

வீட்டுக்குள் தனியாக இருந்த உறவுக்காரப் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதிக்கு அருகே உள்ள கரைப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். தங்கமணி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர்களுடைய உறவினரான கன்னியப்பன் என்பவருடன் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கன்னியப்பன் தங்கமணியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடனுக்கு வட்டியும் கட்டாமல் வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த தங்கமணி, எல்லப்பாளையம் பகுதியில் உள்ள கன்னியப்பன் வீட்டிற்கு சென்று, தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு வந்துள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில் கைகலப்பாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கன்னியப்பன் தங்கமணியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தாளத்துரை பகுதியில் உள்ள தனது நண்பன் சுதாகர் என்பவருடன் தங்கமணி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

ஆனால், அந்த சமயம் தங்கமணியின் கணவர் சுப்பிரமணியும் வீட்டில் இருந்துள்ளார். இதனால், அங்கேயே பதுங்கியிருந்த இருவரும் சுப்பிரமணி வீட்டில் இருந்து வெளியேறும் வரை காத்திருந்தனர். அதன்பிறகு, சுப்பிரமணி வீட்டைவிட்டு வெளியேறிய பின், கன்னியப்பனும் சுதாகரும் வீட்டுக்குள் சென்று தங்கமணியிடம் மீண்டும் வட்டிக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தங்கமணி பணம் கொடுக்க முடியாது எனக் கூறி கடுமையாகத் திட்டியுள்ளார்.

 

அப்போது, கன்னியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கமணியின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், போலீஸ் தங்களைப் பின்தொடர்ந்து வரக்கூடாது என நினைத்து அவரது உடலைச் சுற்றி மிளகாய் பொடி தூவியுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பியோடிய இருவரும் குளக்கரைக்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் இருவரும் அணிந்திருந்த ஆடைகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, அதன்பிறகு அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

இந்நிலையில், வீட்டுக்கு திரும்பிவந்த சுப்பிரமணி தன் மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, விசாரணை தொடங்கிய 12 மணி நேரத்தில் கொலையாளிகளான கன்னியப்பன் மற்றும் சுதாகர் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

 

பின்னர், இருவரையும் கைது செய்த அன்னூர் தனிப்படை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதால், உறவுக்காரப் பெண்ணையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.