Skip to main content

ஒன்றரை பவுன் நகைக்காக பட்டப்பகலில் புது மணப்பெண் படுகொலை!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
Virudhunagar district Thiruthangal

 

 

கணவன் செல்வபாண்டியனுடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய ஒன்றரை மாதத்திலேயே, நகைக்காக யாரோ சிலரால் கொல்லப்படுவோம் என்பதை, பிரகதி மோனிகா அறிந்திருக்கவில்லை. அன்றைய (8-ஆம் தேதி) தினம், செல்வபாண்டியனும், அவனது பெற்றோரும் வேலைக்கு சென்றுவிட, மதிய நேரத்தில் பிரகதி மோனிகா மட்டுமே வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, அவர்களின் வீட்டு கதவு தட்டப்பட்டது. 

 

வீட்டுக்குள் புகுந்தவர்கள், பிரகதி மோனிகா வசித்த அதே (சிவகாசி – திருத்தங்கல் – ஆலமரத்துப்பட்டி ரோடு)  பெரியார் காலனியில் குடியிருக்கும் இளைஞர்கள்தான். மதிய சாப்பாட்டுக்காக, செல்வபாண்டியன் வீடு வந்து சேர்வதற்குள், கழுத்தறுபட்டு பிணமாக கிடந்தாள் பிரகதி மோனிகா. 

 

எதற்காக இந்த கொடூரக் கொலை? 

 

பி.ஏ. பட்டதாரியான பிரகதி மோனிகாவுக்கு கழுத்து நிறைய நகைகள் போட்டு, அவளது பெற்றோர், செல்வபாண்டியனுக்கு திருமணம் முடித்து வைத்தனர், கரோனா காலக்கட்டத்தில் ஒரு வேலைக்கும் செல்லாமல், போதை போன்ற செலவுகளுக்கு, கையில் பணம் இல்லாமல் திரிந்த அந்த ஏரியா இளைஞனின் கண்களை,  பிரகதி போட்டிருந்த நகைகள் உறுத்தியிருக்கின்றன.  அவன், நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, நகைகளைப் பறிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறான்.  பகல் பொழுதென்றாலும், ஆளில்லாத நேரம் பார்த்து, கதவைத் தட்டி,  அந்த இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, டாலருடன் கூடிய ஒன்றரை பவுன் செயினும், மஞ்சள் கயிற்றில்  அரை பவுன் தாலி மட்டுமே, பிரகதி அணிந்திருக்கிறார். வந்தவர்கள், இரண்டு பவுன் தங்கத்துக்காக கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கின்றனர். அவர்களுடன் அவள் போராடியபோது, கத்தியால் கையை கீறியிருக்கின்றனர். உயிருக்காகவும் அவள் போராட, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டே, நகையோடு கிளம்பியிருக்கின்றனர். அரை பவுன் டாலர், அவள் பிணத்தருகேதான் கிடந்திருக்கிறது. வெறும் ஒன்றரை பவுனுக்காகத்தான் கொலையே நடந்திருக்கிறது. 

 

மதுரை எஸ்.பி. சுஜித்குமார், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் நேரில் விசாரணை நடத்த, தனிப்படை அமைக்கப்பட்டு, மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்த, அந்த ஏரியாவிலுள்ள 7 இளைஞர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் அளித்த தகவலால்,  முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளான்.  

 

இந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அழுத்தம் தந்து,  சிவகாசி அரசு மருத்துவமனையில், பிரகதியின் உறவினர்கள்,  பிணத்தை வாங்க மறுத்தனர். ‘குற்றவாளியைப் பிடித்துவிட்டோம்’ என்று அந்த இளைஞர்கள் குறித்த விபரங்களை காவல்துறையினர் சொன்னபிறகே, பிரகதியின் உடல் பெறப்பட்டுள்ளது.  உழைக்காமலேயே, தங்கள் இஷ்டத்துக்கு வாழவேண்டும் என்ற  குறுக்கு புத்தி, சிலரை நகைப்பறிப்பில் ஈடுபட வைத்து, புதுமணப் பெண்ணின் உயிரையும் பறித்துவிட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.